
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் இதில் அடங்குவர்.
பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 46,870 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 281 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்துவசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறவுள்ள வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர் எழுத இருந்தனர். இதற்காக 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவும் 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நாளை தொடங்கவுள்ள பிளஸ்-1 தேர்வை 9 ஆயிரத்து 200 மாணவர்கள், 9 ஆயிரத்து 64 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 264 பேர் எழுத உள்ளனர்.




