மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சில நாட்களுக்கு முன்பு சந்தித்த சந்திரபாபு நாயுடு, காங்கிரசுடன் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்தார். நேற்று பெங்களூரில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியையும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணிக் கட்சியாக உள்ள திமுகவையும் தமது பாரதீய ஜனதா எதிர்ப்பு அணியில் பங்கேற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராகுல் காந்தியுடனான சந்திப்பை வரவேற்ற மு.க.ஸ்டாலின் பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்தை வரவேற்பதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.


