
அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத செயலியாக தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப், இடம் பெற்றுள்ளது.
அதைத் தக்க வைத்துக் கொள்ள, வாட்ஸ் அப் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஃபேஸ் புக் நிறுவனம் அவ்வப்போது பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் குழுக்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை அந்த நிறுவனம் கொண்டு வருகிறது.
குழுவின் எண்ணிக்கை அதிகரிப்பால், பயன்பாட்டாளர் பலருக்கு தொல்லையாக அமைந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்து வருகிறது.
முன்பு வாட்ஸ் அப் குழுக்களில் ஒருவரைச் சேர்ப்பதற்கு எந்தவித அனுமதியும், கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது.

அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யார் யார் உங்களைக் குழுக்களில் சேர்க்கலாம் என்ற கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், யார் வேண்டுமானாலும் உங்களை வாட்ஸ் அப் குழுக்களில் சேர்ப்பது “எவரிஒன்’, செல்லிடப்பேசியில் பதிவிடப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டும் உங்களைக் குழுக்களில் சேர்ப்பதற்கு “மை கான்டாக்ட்ஸ்’, யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கு “நோபடி’ என்ற மூன்று தேர்வுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்தது.
இந்தச் சேவையால் ஏராளமான வாட்ஸ் ஆப் குழு பயன்பாட்டாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது “மை கான்டாக்ட்ஸ் எக்சப்ட்’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்ட எண்களில் யார், யார் உங்களை குழுக்களில் சேர்க்கலாம் என தனித் தனியாக அனுமதி அளிக்கலாம். தேவையற்றவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் உங்களை குழுக்களில் சேர்ப்பதில் இருந்து முன்கூட்டியே தவிர்க்கலாம்.
இந்த புதிய சேவையைப் பெற வேண்டுமென்றால் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் – அக்கவுண்ட் – பிரைவசி – குரூப்ஸ் ஆகியவற்றை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும்.
இதேபோல், வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட தொடர் வாய்ஸ் மேசேஜை, வாட்ஸ் அப் கணினியில் ஒன்றை மட்டும் கிளிக் செய்து அனைத்தையும் கேட்கும் புதிய சேவையையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.