ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 80 சதவீத பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா தொற்று குறைந்து விட்டதால் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06140) ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற மே 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06141) ஊட்டியில் மதியம் 12.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் முன்பதிவில்லா 2 பெட்டிகள் வருகிற 4-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06138) குன்னூரில் மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
அதுபோல் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் ஊட்டியில் காலை 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06143) குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06136) மேட்டுப்பாளையத்தில் காலை 7.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு முன்பதிவில்லா பெட்டியும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்பட உள்ளது.
ஊட்டியில் இருந்து குன்னூர் வரை 2 முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டி மேட்டுப்பாளையம் வரையும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
