உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலியா சிக்கும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முத்தரப்பு தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணி, உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, அனைத்து போட்டிகளிலும் வென்று சாதித்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளின் மோதல் ஒரு ‘யுத்தம்’ போன்றே இருக்கும் என்ற பரபரப்பு இப்போது தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியுடன் தொடங்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிஸ்பா உல் ஹக் இது குறித்துக் கூறும்போது, ‘‘சிட்னியில் ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா களமிறங்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் மாற்றங்கள் எதுவும் செய்யலாம்… காரணம் சிட்னியில் சுழற்பந்து வீச்சு பல வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் வகையில் உள்ளது. காலிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணீயின் தஹிர் சிறப்பாக செயல்பட்டார். இலங்கை அணிக்கு எதிராக அவர் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு வழிவகுத்தார். எனவே சிட்னியில் நல்ல சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். சிட்னியில் ஆஸ்திரேலியா தடுமாறும். அதேநேரம் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதால் இது இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும்’’ என்றார்.
இந்திய சுழலில் ஆஸ்திரேலியா சிக்கும்: பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா
Popular Categories


