ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 27.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்ரமணியன்-
புதன்கிழமையன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் குரூப் 1 பிரிவில் வங்கதேச அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே அபுதாபியில் நடைபெற்றது. இரண்டாவது போட்டி அதே மைதானத்தில், குரூப் 2 பிரிவில் ஸ்காட்லாந்து அணிக்கும் நமீபியா அணிக்கும் இடையே நடந்தது.
வங்கதேசம்-இங்கிலாந்து
பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் தொடக்க வீரர் லிட்டன்தாஸ் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நயீம் ஆட்டமிழந்தார். ஆறாவது ஓவரில், இரண்டாவது பந்தில் பெருதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப்-அல்-ஹசன் நாலு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை. எனவே இருபது ஓவரில் வங்கதேச அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 124 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
அடுத்து விளையாட வந்த இங்கிலாந்து இந்த எளிமையான இலக்கை 14.1 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 126 எடுத்து அடைந்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன் அடித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ஸ்காட்லாந்து – நமீபியா
நமீபியா டாஸ் வென்றது. ஸ்காட்லாந்து அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரிலேயெ ஸ்காட்லாந்து அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஓவரின் முதல் பந்தில் ஜியார்ஜ் முன்சி, மூன்றாவது பந்தில் கால்கம் மெக்லீட், நான்காவது பந்தில் ரிச்சர்ட் பென்னிங்டன் ஆகியோர் ஆட்டமிழந்தமினர். மேத்யூ க்ராஸ் (19 ரன்), மைக்கேல் லீஸ்க் (44 ரன்), கிரிஸ் கீவ்ஸ் (25 ரன் எடுத்தனர். எனவே ஸ்காட்லாந்து அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 109 ரன் எடுத்தது.
அடுத்து ஆடவந்த நமீபியா நிதானமாக ஆடி 19.1 ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 115 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். இருந்தாலும் நமீபியா அணிக்கு அவர்கள் நிர்ணயித்த இலக்கு மிகக் குறைவானது என்பதால் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. முதல் ஓவரில் மூன்று விக்கட் எடுத்த நமீபிய அணியின் பந்துவீச்சாளர் ரூபன் ட்ரம்பள்மேன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நாளை துபாயில் ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையேயான குரூப் 1 போட்டி நடக்கிறது.