ஹெமெட் (கலிபோர்னியா, அமெரிக்கா): அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹெமெட் பகுதியில் ஒரு முதியோர் காப்பகம் உள்ளது. அந்தக் காப்பகத்துக்குள் புகுந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், 2 பாட்டில் பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து மூதாட்டியின் வாயில் ஊற்றி அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். அலறியடித்து அந்த மூதாட்டி அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பட்டனை அழுத்தி காவலாளிகளை உதவிக்கு அழைத்தார். இந்த சத்தத்தைக் கேட்டதுமே மாணவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின், அந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதன்பின்னர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், சக்கர நாற்காலியின் துணையுடன் உலவி வருகிறார். மூதாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன் (15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்குப் பின்னர் கைதிகளுக்கான சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த மூதாட்டி, நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்து விட்டீர்கள். நீங்கள் கட்டாயம் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என கண்ணீர் மல்கக் கூறினார்.
87 வயது மூதாட்டி பலாத்காரம்: 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை
Popular Categories


