
பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பாரிசில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் இரு தரப்பு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி பேசும்போது, “எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் மெக்ரானுக்கு எனது நன்றி. சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவத்தின் மதிப்பினை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடு பிரான்ஸ். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம். யு.பி.ஐ முறையை அமல்படுத்திட பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
“இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்புகள் குறித்து விளக்கினார். “இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் முக்கிய தூண்களில் ஒன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகும்! பாதுகாப்பு உறவுகள் எப்போதும் நமது உறவுகளின் அடித்தளமாக இருக்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையின் சின்ன.
“மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் ஆகியவற்றில் பிரான்ஸ் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களாக இருந்தாலும் சரி, இந்திய கடற்படைக் கப்பல்களாக இருந்தாலும் சரி, நாம் இணைந்து நமது தேவைகளை மட்டுமல்ல, மற்ற நட்பு நாடுகளின் தேவைகளையும் நிறைவேற்ற விரும்புகிறோம்.
“இரு நாடுகளின் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம். முந்தைய 25 ஆண்டுகளின் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குகிறோம்.
”“நம்மை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதி எடுத்துள்ளனர். இந்தப் பயணத்தில் பிரான்சை இயற்கையான கூட்டாளியாக பார்க்கிறோம். பிரான்சின் தேசிய தினம் உலகிற்கு ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ ஆகியவற்றின் அடையாளமாகும்.
“இந்தியாவில் தேசிய அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் பிரான்ஸ் அரசு பங்குதாரராக இணைகிறது. இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்சில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.
இமானுவெல் மெக்ரான் செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் ரிஜிமெண்ட் வீரர்கள் பங்கேற்றதில் மகிழ்ச்சி. உலகப் போர்களின் போது இந்திய ராணுவத்தினர், பிரெஞ்சு ராணுவத்தினருடன் இணைந்து போரிட்டனர். இரு நாடுகளும் பல்வேறு துறைகளி்ல் இணைந்து பணியாற்றுவோம்“.” என்றார்.
முன்னதாக, அதிபர் இமானுவெல் மெக்ரான் அழைப்பின் பேரில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தேசிய தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஜூலை 14 நேற்று, அதிபர் மாளிகையான எல்சி பேலஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் இமானுவெல் மெக்ரான் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு ,ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
பாரீஸில், தேசிய தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பைப் பார்வையிட குவிந்த மக்களை நோக்கி கையசைத்தபடி அதிபர் மேக்ரான் வாகனத்தில் சென்றார். தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்த தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

அணிவகுப்பின் போது இந்தியப் படைகளின் அணிவகுப்பும் இருந்தது. சாரே ஜஹான் சே அச்சா பாடல் இசைத்த போது, மோடி எழுந்து நின்று, சல்யூட் அடித்தபடி, ராணுவ வீரர்களுக்கும் மரியாதை அளித்தார்.