spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்‘மலேசிய பாம்பு காதலன்’ விஷப் பாம்பு கடித்து மரணம் !

‘மலேசிய பாம்பு காதலன்’ விஷப் பாம்பு கடித்து மரணம் !

- Advertisement -

பெடாலிங் ஜெயா:

மலேசிய பாம்புக் காதலன் என்று பட்டப் பெயர் சூட்டப்பெற்ற 33 வயது இளைஞர் அபு ஜரின் ஹுசைன், விஷப் பாம்பு கடித்தே மரணத்தைத் தழுவினார். இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர், தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தவர்.

அபு ஜரின், வெள்ளிக்கிழமை நேற்று காலை 12.40 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. இவர், கடந்த மார்ச் 12ம் தேதி ஓர் இடத்தில் பாம்பு பிடிக்கப் போய், விஷம் கக்கும் நாகத்தால் தாக்குண்டு, உடனடியாக சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் உள்ள டெமர்லோ தீயணைப்பு நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றியவர் அபு ஜாரின் ஹுசைன். இவர் மலேசியாவின் பிரபல நபராக மட்டுமல்ல, சில பிரபலமான இணையதளங்களில் பேட்டி காணப்பட்டும், பிரிட்டிஷ் இதழான டெய்லி மிரர் மற்றும் தி டெய்லி மெயிலில் நேர்காணப் பட்டும் இவரைக் குறித்த கட்டுரைகள் வந்ததால், உலகில் பல இடங்களிலும் பிரபலமாகிவிட்டார்.

தீயணைப்புத் துறையில் மட்டுமல்லாமல், பாம்புகள் எங்காவது இருக்கிறது என்று செல்போனில் தகவல் கிடைத்தால் போதும், உடனே அங்கு விரைந்து சென்று பாம்புகளைப் கொல்லாமல், அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்து வந்து உயிரியல் பூங்காவில் விட்டுவிடுவார். தான் விடுமுறையில் இருந்தாலும் கூட யாரேனும் பாம்பு பிடிக்க அழைத்தால் உடனே அதை தன் முக்கியக் கடமையாகச் செய்து மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை செய்து வந்தார்.

ஹுசைன் இதனாலேயே மக்கள் மத்தியில் ‘பாம்பு காதலன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். மிகக் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம், விஷம் கக்கும் நாகம், மாம்பா எனப்படும் ஆஸ்திரேலியன் வகை கொடிய விஷப் பாம்புகளை வைத்து ஹூசைன் செய்த சாகசக் காட்சிகள் ஊடகங்களில் மிகப் பிரபலமானவை. பல்வேறு கலை நிகழ்ச்சிகலையும் இந்தப் பாம்புகளை வைத்தே ஹூசைன் நடத்தியுள்ளார்.

ஹூசைனின் வீட்டிலும் சர்வ சாதாரணமாக பாம்புகள் உலா வரும். பாம்புக்கு முத்தம் கொடுப்பது, மூக்கில் பாம்பை நுழைத்து, வாய் வழியாக எடுப்பது, ராஜநாகத்துடன் படுத்து தூங்குவது, அருகில் வைத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, சாப்பிடுவது என இவரின் வீடியோக்கள் இணைய தளங்களில் அதிகம் உலாவந்தன.

ஒரு முறை வெளிநாட்டு பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், தாய்லாந்தைச் சேர்ந்த நபர், தனது மறைந்து போன காதலியின் நினைவாக, அவர் ஜாடையில் இருப்பதால், தான் செல்லமாக வளர்த்த பாம்பையே திருமணம் செய்து கொண்டார் என்று கூறி அபு ஜாரினின் படத்துடன் தகவல் வெளியானது. ஆனால், அபு ஜாரின் அப்படி எல்லாம் பாம்பைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடைய படத்தைத் தவறுதலாக அதில் வெளியிட்டு விட்டார்களாம்!

கடந்த மார்ச் 12ம் தேதி ஓர் இடத்தில் விஷம் கக்கும் நாகம் இருப்பதாக இவருக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பிடிக்கும் முயற்சியில் ஹுசைன் ஈடுபட்டிருந்தபோது, அவரை அந்தப் பாம்பு தீண்டியது. இதனால் மயக்கம் அடைந்தார் ஹுசைன். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால், 4 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தும் மார்ச் 16ம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று உயிரிழந்தார்.

அவரைக் கடித்த பாம்பின் ஒரு கடி விஷம் ஒரு யானையையே கொல்லும் அளவுக்கு கொடூரமானதாம்! அபு ஜாரின் தன்னுடன் பணியாற்றும் சக பணியாளர்களுக்கும் பாம்பு பிடிக்கும் கலையை கற்றுக் கொடுத்து விழிப்புணர்வூட்டியுள்ளார். அபு ஜாரின் ஹுசைன் பாம்பு பிடிக்கும் கலையை தனது தந்தையிடம் இருந்து கற்றுள்ளார். 2015இல், இதற்கு முன்பும் கூட அவரை பாம்பு கடித்துள்ளதாம். அப்போது இரு நாட்கள் கோமாவில் இருந்து உயிர் பிழைத்தாராம்.

பாம்பு கடித்து உயிரிழந்த அபு ஜாரின் ஹுசைனின் உடல், அவரது சொந்த ஊரான கெலாண்டன் நகரில் உள்ள பசிர் புதி, கெம்பங் பெர்மடாங் காடிங்கில் சனிக்கிழமை இன்று அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe