ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. மேலும், இந்தத் திருமணத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் புதிய வீடுகளில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செலவு செய்யும் எனவும் அந்த அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சோமாலிய இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை அந்நாட்டில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எரித்ரியாவில் போரினால் ஆண்கள் பலர் உயிரிழந்துவிட்டதால், ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தச் செய்தியில் உண்மையில்லை என்று எரித்ரிய அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை வைரலாகப் பரப்பிய சமூக ஊடகத்துக்கு மெமோ கொடுத்துள்ள அரசு, இது ‘ஏப்ரல் ஃபூல்” போல் மக்களை முட்டாளாக்கும் கதை என்று தெரிவித்துள்ளது.
மேற்கண்ட போலி அரசு உத்தரவு அரபியில் எழுதப்பட்டிருந்ததாகவும், இது டிவிட்டரில் ஹேஷ் டேக் போட்டு வைரலாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களாக உலவிய இந்த உத்தரவை பலர் அச்சுப் பிரதி எடுத்து வைத்ததாகவும், ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறையான இருதார மணத்துக்கு எதிர்மாறாக இந்த உத்தரவு உள்ளதாகவும் மக்கள் கூறினர். ஆனால், தற்போதும், எரித்ரியாவைச் சுற்றியுள்ள நாடுகளிலும், எரித்ரியாவிலும் இருதார மணம் என்பது, பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கும், உட்பிரிவுகளுக்கும் உட்பட்டு அமல் படுத்தப் படுகிறது என்றும், தற்போது வெளியான தகவல் வேண்டுமென்றே விஷமிகளால் உலவவிடப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெளிவாக்கியுள்ளது.
நாட்டில் ஆண்களுக்கு பஞ்சமில்லை என்றும், ஆண் பெண் விகிதாசாரம் சரி சமமாகவே உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ள எரித்ரியா அரசு, இது போல் ஏற்கெனவே 2012, 2013, 2015களில் மேற்கத்திய ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பியதாகவும், முக்கியமாக, டிவிட்டர் சமூக ஊடகம் இதில் முக்கியப் பங்காற்றியதாகவும் கூறியுள்ளது.


