திமுக.,வின் முன்னாள் எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது, இலங்கையில் பெருமளவில் ஆயிரம் கோடிகள் செலவில் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை இணைந்து செய்யப் போவதாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஓமன் அரசு முதலில் முதலீடு செய்வதாக தகவல் வெளியானது. அதாவது, ஓமனின் கச்சா எண்ணெய் அமைச்சகம், சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.
பல பில்லியன் டாலர்கள் திட்ட மதிப்பில் செயல்படுத்தப் படும் இந்த திட்ட தொகையில், அதாவது, 3.85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அமையும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சுமார் 1887 மில்லியன் டாலர்கள் நேரடி முதலீட்டில், 70% முதலீட்டினை சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டர்நேசனல் தர உள்ளதாகவும், மீதமுள்ள தொகையில் சுமார் 2000 மில்லியன் டாலர் அளவுக்கு கடனாக திரட்டப் படும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.
கட்டுமானப் பணிகள், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள் அனைத்தும் சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஓமனின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கூட்டு ஒப்பந்ததின் படி செயல்படுத்தப் படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் ஓமன் அரசு திடீரென இந்த திட்டத்தில் தாங்கள் இல்லை என்று கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தது. மேலும் தங்களுக்கும் சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றும் அது அறிவித்ததாக, இலங்கை முதலீட்டுக் குழு கூறியது.
இலங்கை முதலீட்டுக் குழுவின் அறிவிப்பின் படி சிங்கப்பூரில் இயங்கி வரும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் சிங்கப்பூரின் ஏசிஆர்ஏ (Accounting and Corporate Regulatory Authority) முகமையில் பதிவு பெற்று இயங்கி வருகிறது. இதன் நான்கு இயக்குநர்களில் மூவர் சுந்தீப் ஆனந்த் ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசூயா ஜெகத்ரட்சகன் என்று குறிப்பிடப்பட்டு, அவர்களின் முகவரி, சென்னை முகவரியாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இவர்கள் மூவரும், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மகன், மகள், மற்றும் மனைவி என தெரியவந்துள்ளது. 
இலங்கை வரலாறில் இவ்வளவு பெரிய நேரடி முதலீட்டினை இன்றுதான் காண்கிறோம் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியானது.
ஹம்பந்தோட்டா துறைமுகம் 99 வருட குத்தகையில், சீனாவுக்கு விடப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தில்தான் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் அமைய வுள்ளது. ஓமன் மற்றும் சிங்கப்பூரின் நேரடி முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் நிலையில், ஓமன் அரசுக்கும் இந்த திட்டத்துக்கும் தொடர்பில்லை என்றும், ஓமன் அரசுக்கும் சில்வர் பார்க் நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது என்றும் கூறப் பட்டுள்ளதால், இப்போது சில்வர்பார்க் நிறுவனம் குறித்து திடீர் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக ஊடகங்கள் சில ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றும், அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, இலங்கைக்கும் திமுக.,வுக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் பல்வேறு யூகங்களை உலவவிட்டு வருகின்றனர்.



