ஹிஜாப் விவகாரம்: உண்மையை மறைத்து எழுத வேண்டிய அவசியம் என்ன..?!

Published:

hijab case1 - 2026

‘இத்தனை நாட்களாக அனுமதிக்கப்பட்டு வந்த ஹிஜாப் திடீரென்று தடை செய்யப்படுவது ஏன்? ஹிஜாபிற்கு எதிராக காவித்துண்டு அணிந்து வரும் போராட்டங்கள் நடைபெற வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்விகளை எழுப்பும் திரு. ஹபீப் முகம்மதுவின் கட்டுரை (ஹிஜாப் பிரச்னை – மக்களின் எதிர்பார்ப்பு: துக்ளக் 16.3.22), முழு உண்மையைச் சொல்லாமல், நடுநிலையாளர்களைக் குழப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.

திரு ஹபீப், 19.2.22 தேதியிட்ட த ஹிந்து பத்திரிகையில் வெளியான செய்தியில் இருந்து ஹிஜாபுக்கு ஆதரவான சில தகவல்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். அதில், அமைச்சர் திரு. நாகேஷ் கூறியதாக த ஹிந்து வெளியிட்டிருக்கும் தகவலை வேண்டுமென்றே அரைகுறையாகத் தந்திருக்கிறார்.

‘கல்லூரிகளில் சீருடை அணிய வேண்டும் என்று விதிகள் கிடையாது’ என்று அமைச்சர் சொன்னதாக ஹபீப் குறிப்பிடுகிறார்.

அமைச்சர் சொன்னதாக த ஹிந்து வெளியிட்டிருக்கும் செய்தி: “I agree that there are no fixed codes for uniforms for colleges, but wherever the CDCs have prescribed a uniform, it has to be followed” அதாவது, “கல்லூரிகளில் சீருடைக்கான நிலையான சட்டங்கள் கிடையாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். எனினும், எங்கெல்லாம் பள்ளி ஒழுங்குமுறை கமிட்டிகள் ஒரு சீருடையைப் பரிந்துரைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அது (அதே சீருடை) கடைப்பிடிக்கப்பட வேண்டும்.” 

இந்த ஒழுங்கு மீறப்பட்டதைத் தொடர்ந்துதான் பிரச்சினை ஏற்பட்டது என்பதைப் பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை.

மேலும், த ஹிந்து பத்திரிகைச் செய்தியின் மிக முக்கியமான பகுதியைத் திரு. ஹபீப் கவனமாகத் தவிர்த்து விட்டார். பிரச்னைக்குக் காரணம் என்று ஹிந்து பத்திரிகை தரும் தகவல்களைச் சுருக்கமாகத் தருகிறேன்:

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

1. ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் ஊர்வலத்தில் ஆஸாதி உள்ளிட்ட சில முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்த நிலையில் கலந்து கொண்டனர். (அவருக்கு அது ஏபிவிபி ஊர்வலம் என்பதே தெரியாது என்றும், பள்ளித் தலைமை வற்புறுத்தலால் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.)

2. இதைத் தொடர்ந்து, கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, அந்தப் பெண்களின் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு கண்டித்தது. அவர்கள் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகள் பிரச்னையைக் கிளப்பினார்கள் என்று பிஜேபி தரப்பு தெரிவிக்கிறது.

கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடனும், அதன் அரசியல் அங்கமான ஸோஷல் டெமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்த இரண்டு தகவல்களையும் த ஹிந்து பத்திரிகை விரிவாகவே தெரிவித்துள்ளது. ஹபீப், இவற்றைக் கவனமாகத் தவிர்த்துள்ளார்.

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு முன்னாள் சிமியின் இந்நாள் அவதாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிமி அமைப்பு அதன் தேசத்துரோக, பயங்கரவாதப் போக்கின் காரணமாகத் தடை செய்யப்பட்டது என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய விஷயம்.

மேலும், மாணவி ஆஸாத் பிரச்னை ஆரம்பமானது 27 டிசம்பர் 2021 அன்று. மாணவிகள் தரப்பில் பிரச்னை பெரிதாக்கப்பட்ட நிலையில் ஜனவரி 7ஆம் தேதி ஹிந்து மாணவர்கள் நாங்கள் காவித்துண்டு அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். பிரச்னை முடிவுக்கு வராததால்தான் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். இதையும் ஹிந்து பத்திரிகை தெளிவாகவே சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், சுமார் 10 நாட்களுக்கும் மேலாக ஹிந்து மாணவர்கள் எந்தவித பிரச்னையிலும் ஈடுபடவில்லை என்பதைப் பற்றித் திரு. ஹபீப் வாயே திறக்கவில்லை.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேலும், கர்நாடகப் பள்ளிகளில் இத்தனை வருடங்களாக ஹிஜாபுக்குத் தடை இல்லை என்பதையும், வகுப்பறைகளில் மட்டுமே மாணவிகள் ஹிஜாப் அணிவதில்லை என்பதையும் துக்ளக் உட்பட எத்தனையோ நடுநிலைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டி இருப்பதை வசதியாக மறைக்கும் திரு. ஹபீப், மாணவிகள் சொல்லும் அப்பட்டமான பொய்களை உண்மை போலச் சித்திரிக்க முயல்கிறார்.

ஆமாம், ஹிஜாப் அணிவதும் அணியாததும் ஒருபுறம் இருக்கட்டும், இந்தப் பிரச்னைக்காக ஓர் அப்பாவி இளைஞ முஸ்லிம் பயங்கரவாதிகள் கொலை செய்தார்களே, அதைக் கண்டிக்க வேண்டும் என்று திரு. ஹபீபுக்குத் தோன்றாதது ஏன்?

இல்லாத பிரச்னையை உருவாக்கியது யார்? அதைப் படுகொலை வரை வளர்த்துச் சென்றது யார்? இதைப்பற்றித் திரு. ஹபீப் மிகவும் சாதுரியமாக மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

முழுப்பூசணிக்காயை மறைப்பது போன்ற தனது கட்டுரை வாசகர்களின் மனதில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, திரு. ஹபீப், ‘பிரச்னை நமது நாட்டின் எல்லையையும் தாண்டிவிட்ட’தாக முன்னுரை தருகிறார். நமது நாட்டு எல்லைக்கு அப்பால் இந்தப் பிரச்னையைப் பற்றி முழங்கியவர் கோமாளித்தனத்தில் ராகுல் காந்தியுடன் போட்டியிட்டு வரும் இம்ரான் கான் என்பதைத் திரு. ஹபீப் வசதியாக மறைத்து விட்டார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அதெல்லாம் போகட்டும், இந்தியாவின் பன்முகத் தன்மையைப் போற்றி, முன்னேற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்று திரு. ஹபீப் சொல்கிறாரே, ஊருக்கு உபதேசம் செய்யும் அவர், இதை முதலில் தன்னுடைய சமுதாயத்தில் தொடங்கி வைக்கட்டுமே. முஸ்லிம் இல்லத் திருமணங்களிலும், இதர பொது நிகழ்ச்சிகளிலும் ஹிந்துக்களைப் பற்றி திராவிட ‘பண்பாளர்கள்’ எப்படியெல்லாம் பேசுகிறார்கள்? அதை இவரது சமுதாயப் பெரியவர்கள் யாராவது கண்டித்திருக்கிறார்களா? காலங்காலமாக, பிராமண ஜாதியையும், ஹிந்து மதக் கடவுளரையும் மிக மிக அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்து வரும் திராவிடக் கட்சியினருக்குக் குல்லாய் போட்டு நோன்புக் கஞ்சி ஊட்டி விடும் பழக்கத்தைத் இஸ்லாமிய சமுதாயம் கைவிட வேண்டும் என்று திரு. ஹபீப் போன்ற பெரியவர்கள் ஒரு நாளாவது முயற்சி செய்திருக்கிறார்களா? எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எத்தனை முஸ்லிம் பெரியவர்கள் கண்டித்திருக்கிறார்கள்?

Be the change you wish to see in the world என்ற காந்திஜின் வரிகளை திரு. ஹபீப் அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். அவர் விரும்பும் மாற்றத்தை அவரது சமுதாயத்தில் இருந்து அவர் தொடங்கட்டும்.

அன்புடன் தங்கள்,

வேதா டி. ஶ்ரீதரன்

Related articles

Recent articles

spot_img