
— முரளி சீதாராமன் —
மதுராந்தகம் பொதுக்கூட்டம்… NDA கூட்டணி மிகச் சிறப்பாக உருவாகி உள்ளது. திமுக / காங்கிரஸ் பதற்றமடைந்துள்ளனர் என்பது ஸ்டாலின் மற்றும் கரூர் ஜோதிமணியின் உடனடி எதிர்வினைகளில் தெரிகிறது.
1989 ஜனவரியில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி இல்லை. மேலும் அதிமுக (ஜெயலலிதா) – (ஜானகி) என்றும் பிரிந்து கிடந்தது. வோட்டுப் பிளவை சாதகமாக்கிக் கொண்டு திமுக 1989 ஜனவரியில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. பிறகு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலையும் மீட்கப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். காங்கிரஸ் மற்றும் ஒன்றுபட்ட அதிமுக கூட்டணி உருவாயிற்று.
அதன்பலன் அதே ஆண்டு நவம்பர் 1989 ல் அதிமுக + காங்கிரஸ் 38/39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. ஒரே ஒரு தொகுதி நாகப்பட்டினம் மட்டும்தான் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வென்றது. திமுக ஒரு சீட் கூட வெல்ல முடியவில்லை.
அதிமுக இணைப்பு மற்றும் காங்கிரசுடன் கூட்டணி எப்படி அப்போது திமுகவுக்கு எதிராக ஏற்படுத்தியதோ அதே போன்ற பெரும் எழுச்சியை இப்போது காண முடிகிறது. அதிமுகவின் இரு அணிகளின் நெருக்கம் மற்றும் பாஜகவுடன் இணைப்பு – மிகச் சிறப்பான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக – காங்கிரஸ் இருவரின் பதற்றத்திலும் இந்த எதிர்ப்பு எழுச்சியின் தாக்கம் புரிகிறது.
அண்ணாமலை முதலிலேயே மிகச் சிறப்பாக உரை ஆற்றிவிட்டார். புரோடோகால் பிரகாரம் – நேர அவகாசம் கருதி – கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயரை மட்டுமே பெயர் உச்சரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கக் கூடும். எனவே அண்ணாமலை பெயரை மோடி ஏன் குறிப்பிடவில்லை போன்ற ஊகங்களுக்கு எல்லாம் இடம் கொடுக்கத் தேவையில்லை.
அப்படிப் பார்த்தால் ஆளுநராக இருந்து பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்துள்ள டாக்டரு தமிழிசை சௌந்தரராஜன் பெயரையோ, மேடையிலேயே இருந்த தேசிய மகளிர் பிரிவில் பொறுப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன் பெயரையோ கூட குறிப்பிடவில்லை.
இவை எல்லாம் பல கட்சிக் கூட்டணி அமையும் போது அந்தந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயரை மட்டுமே பிரதமரின் நேர அவகாசம் கருதி எடுக்கப்பட்ட முடிவுகளாக மட்டுமே இருக்கக் கூடும்.
அண்ணாமலை அவமானப்படுத்தப் பட்டார் – அவருக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பதெல்லாம் வீண் பிரமை! அவர் ஆற்றிய மிகச் சிறப்பான உரை யூ-டியூபில் காணக் கிடைக்கிறது.
அவர்தான் – “சூரியன் மறைந்துவிட்டது – மழை வந்தால் தாமரை மலரும் – இலை துளிர்க்கும்”- என்றெல்லாம் சிறப்பாகப் பேசினார். எனவே தேசிய தெய்வீக அன்பர்களே… வீண் பிரமைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். நம் கண் முன்னே தெரிய வேண்டியது – NDA என்ற அணி மட்டுமே!
அது அதிமுகவா, பாஜகவா, பாமகவா, ஐ.ஜே.கே வா, TTV தலைமையிலான அமமுகவா?, ஏ.சி.சண்முகமா, ஜான்பாண்டியனா, பூவை ஜெகன் மூர்த்தியா… எதுவும் எந்த நபரும் நமக்கு இப்போது கவனத்தில் வரவேண்டியதில்லை.
N.D.A, N.D.A, N.D.A …. அது ஒன்றுதான்! சித்தாந்த எதிரி பதற்றத்தில் இருக்கிறான்! நாம் பதறாமல் கவனமாக இருப்போம்! நமது கவனத்தை திசை திருப்பவும், ஏதோ ஒரு அற்ப விஷயத்தைக் கொளுத்திப் போடவும், அதை வைத்து நமக்குள் சூடான விவாதங்களைக் கிளப்பவும் எதிரி முனைவான்.
அர்ஜுனன் கண்ணில் பட்ட குருவியின் கண்களைப் போல – நமக்கு இலக்கில் தெரியவேண்டியது எல்லாம்… 2026 ல் திராவிட மாடல் அரசின் வீழ்ச்சி!
தேசிய தெய்வீக சக்திகளின் எழுச்சி! NDA கூட்டணியின் வெற்றி!
அவர் அப்போது நம்மை இதைச் சொன்னார், இவர் அப்போது மோடியை இப்படிச் சொன்னார்… எந்த விவாதமும் நமக்குள் தேவை இல்லை! அதை எல்லாம் எதிரி டிவி விவாதத்தில் செய்வான்.
நாம் பதிலுக்கு காங்கிரசை காமராஜரை திமுக எப்படி எல்லாம் கொச்சைப் படுத்தியது, எதிர் அணியில் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் எப்படி எல்லாம் விமர்சித்தார்கள் என்பதை பதிலடியாக எடுத்து வைப்போம்!
NDA தேர் பவனி தொடங்கிவிட்டது – நாம் அச்சாணியாக இருப்போம் அல்லது நீண்ட தேர்வடத்தின் சிறு கயிற்று இழையாக இருப்போம்! எல்லாவற்றுக்கும் மேல் அந்தத் தேரை இழுக்கும் பக்தர்களாக இருப்போம்! நமக்குள் உள்ள மாற்றுக் கருத்துக்களைப் பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய தருணம் இதுவல்ல!
நிச்சயம் 2026 தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரம் உச்சம் தொடும்!
அவரே தர்மத்தின் ரதத்தை செலுத்தும் சாரதியாக – NDA என்ற பஞ்ச பாண்டவர்களுக்கு – ஆயுதம் ஏந்தாவிட்டாலும் அறம் கூறி வழிகாட்டும் கிருஷ்ண பரமாத்வாக இருந்து தர்மத்தை வெல்ல வைப்பார்.
இன்றே அண்ணாமலை அவர்கள் – முதல்வரின் பாஜக அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் – பை – பாயிண்ட் அற்புதமாக பதில் கொடுத்துள்ளார்.
கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை, DELIMITATION ல் தொகுதிகள் குறையும், கவர்னர் உரை வாசிக்காதது உள்ளிட்ட திமுகவின் பிரசாரத்துக்கு உச்சந்தலையில் ஓங்கிக் குட்டி பதிலடி தந்துள்ளார் அண்ணாமலை! எனவே எந்த பிரமைக்கும் நம்மை இழந்துவிடாமல்… NDA வெற்றிபெற உழைப்போம், பிரசாரம் செய்வோம் பிரார்த்திப்போம்!
யாருக்கு எது முடிகிறதோ செய்வோம் – களப்பணியோ, கருத்து பிரசாரமோ, கடவுளிடம் பிரார்த்தனையோ – யாருக்கு எது முடிகிறதோ அதைச் செய்வோம்!
தேசியம் வெல்லட்டும்! தெய்வீகம் தழைக்கட்டும்!




