ஹிந்துபுரத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்திய கோடி தீபோத்ஸவத்தில் மாப்பிள்ளைகள் பங்குகொண்டனர்.
‘நடசிம்ஹா’ நந்தமூரி பாலகிருஷ்ணாக்கு தெய்வ பக்தி அதிகம். அவர் தினமும் தெய்வ வழிபாடும் பூஜையும் தவறாமல் செய்வது வழக்கம். தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள அவர் தன் தொகுதியான ஹிந்துபுர மக்களுக்காக கோடி தீபோத்ஸவத்தை நடத்தினார்.
ஹிந்துபுரம் எம்எல்ஏ, சினிமா ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா தலைமையில் கோடி தீபோத்ஸவம் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் அனந்தபுரம் மாவட்டம் ஹிந்தூபூர் எம்ஜிஎம் மைதானத்தில் நடந்த இந்த கோடி தீபோத்ஸவம் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு வந்து பாலகிருஷ்ணா பங்கேற்றார்.
பாலகிருஷ்ணாவோடு அவர் மனைவி வசுந்தரா தேவி, பெரிய மாப்பிள்ளையும் தெலுங்கு தேசம் கட்சி மாநில முக்கிய செயலருமான லோகேஷ், சின்னமாப்பிள்ளை பரத் குடும்பத்தாரோடு பங்கேற்றனர். சோமவாரம் மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த தீபோத்ஸவத்தை திருவிழாபோல் நடத்தினார் இந்த ஹீரோ.
இந்த விளக்கேற்றும் விழாவுக்கு ஹிந்துபுரம் நகர மக்களோடு சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வந்து விளக்கு ஏற்றினர். எம்ஜிஎம் மைதானத்தில் சிவ நாம ஸ்மரணையே எதிரொலித்தது.
நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா பேசுகையில், “தெலுங்கு மொழி, பண்பாடு, சம்பிரதாயங்கள் மிக உயர்ந்தவை. இதனை யாரும் மறக்க வேண்டாம். இவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது” என்றார்.
அதேபோல் ஹிந்துபுரத்தில் இந்த திருவிழாவை நடத்த இருப்பதாக தனது பேஸ்புக்கில் கூட அறிவித்திருந்தார் பாலகிருஷ்ணா. குடும்பத்தாரோடு பூஜை செய்து வழிபட்ட போட்டோக்களையும் தன் ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார்.
“புனிதமான கார்த்திகை மாதத்தை ஒட்டி பரமேஸ்வரனின் அருளாசிகள் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று மக்கள் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் வந்து பங்கேற்ற பெண்கள், பக்தர்கள், இந்தத் தொகுதி மக்கள், என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. எப்போதும் உங்கள் சேவையில் இருப்பேன்” என்று பேஸ்புக்கில் எழுதியுள்ளார் பாலகிருஷ்ணா.