நரேந்திர மோடி க்கு தடை.. தலைவிக்கு இல்லை.. ஆதங்கப்பட்ட தயாரிப்பாளர்!

Published:

modi filim

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தால் யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை. ஆனால், பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனத் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு, பி.எம். நரேந்திர மோடி என்கிற திரைப்படமாக கடந்த வருடம் வெளியானது. சந்தீப் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்தார்.

நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராகப் பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவான இந்தத் திரைப்படம், 23 மொழிகளில் உருவாகியிருந்தது.

பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் 2019, ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் இந்த திரைப்படத்தை வெளியிட்டால், அது மக்களைத் திசை திருப்பும் செயலாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம்சாட்டியதுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

இதையடுத்து 2019 மக்களவைத் தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மின்னணு ஊடகங்களில் எந்தக் கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்தது.

thalaivi

தேர்தல் நடந்து முடிந்தபிறகு மே 24 அன்று இத்திரைப்படம் இந்தியா முழுக்க வெளியானது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து பி.எம். நரேந்திர மோடி படத்தைத் தயாரித்த சந்தீப் சிங் கூறியதாவது:

பி.எம். நரேந்திர மோடி படத்தைத் தயாரித்ததன் மூலமாக அனைத்து விதமான அனுபவங்களையும் பெற்றேன். எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம், தணிக்கை வாரியம், நீதிமன்றம் என அனைத்துத் தரப்பின் எதிர்ப்பையும் சம்பாதித்தேன்.

இப்படத்தின் படப்பிடிப்பை 35 நாள்களுக்குள் முடித்தோம். இத்தனைக்கும் நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. எல்லோரும் இந்தப் படத்தைக் கண்டு அஞ்சினார்கள். அதனால் தான் எதிர்க்கட்சிகள் இதன் வெளியீட்டை எதிர்த்தன.

இந்தப் படம் வெளியானால் தேர்தலில் தோற்று விடுவோம் என எல்லா எதிர்க்கட்சிகளும் எண்ணின. தனக்கு ஆதரவான படத்தை எடுக்குமாறு மோடிஜி என்னிடம் சொல்லவில்லை. ஒரு தனிநபரின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளிக்கும் விதத்தில் இருப்பதால் இந்தப் படத்தை எடுக்க எண்ணினோம்.

modi filim

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இப்போது எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் யாருக்கும் எவ்விதமான பிரச்னையும் இல்லை. ஆனால் எங்கள் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

உண்மை என்னவென்றால் பலரும் மோடிஜியின் வாழ்க்கையைப் படமாக்க எண்ணினார்கள். நாங்கள்தான் படத்தை எடுத்து முடித்து, வெளியிட்டு அதன்மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினோம் என்றார்.

Related articles

Recent articles

spot_img