பொது சிவில் சட்டம்! கொண்டு வரப்படுமா?

Published:

uniform civil code - 2026

நாட்டு மக்கள் பெரும்பான்மையானோரால் பெரிதும் எதிர்பார்க்கப் படும் பொது சிவில் சட்டம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அல்லது நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன் கொண்டு வரப் படுமா என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், ஆளும் பாஜக.,வின் முக்கிய மூன்று கொள்கைகளில் இரண்டு கொள்கைகளை கடந்த இரு வருடங்களில் செயல்படுத்தியிருக்கின்றது என்பதும், மூன்றாவது கொள்கையை இந்த வருடம் செயல்படுத்தும் என்பதும் தான்.

காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்து 370 வது சட்டப் பிரிவை நீக்க வேண்டும், அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப வேண்டும், நாடு முழுதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என்ற மூன்று அம்சங்களை தங்களது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் பாஜக., சொல்லி வந்துள்ளது.

இவற்றில், முதல் இரண்டு அம்சங்களை கடந்த இரு வருடங்களில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நிறைவேற்றியது. எனவே இந்த வருடம் ஆக.5ம் தேதி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படலாம் என்று கூறப் படுகிறது.

இதன் பின்னணியில் அண்மைக் காலத்தில் நீதிமன்றத்திலேயே சில விவகாரங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், ஒரே சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்த விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றூ மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்தீபா எம் சிங் உத்தரவிட்டுள்ளதைக் கருதலாம்.

மதத்தையும் ஜாதியையும் இனத்தையும் கடந்து 21ஆம் நூற்றாண்டில் தேசம் முன்னேற்றப் பாதையில் கடந்து போகும்போது ஏன் மதத்தின் பெயரால் இரண்டு சட்டங்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டும் ஹிந்து கிறிஸ்தவர் இஸ்லாமியர் மூவருக்கும் ஒரே சட்டம்; ஒருவன் கொலை செய்தால் மூன்று மதத்தை சார்ந்தவருக்கும் இது பொருந்தும்! நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்!

ஆனால் திருமணம், விவாகரத்து, சொத்தில் வாரிசுகளுக்கு சமபங்கு, தத்தெடுத்தல் என்று வரும் போது, ஹிந்துவுக்கும் கிறிஸ்தவருக்கும் ஒரு நீதி ..இஸ்லாமியருக்கு ஒரு நீதி என்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும்! ஒரு ஹிந்துவோ அல்லது கிறுஸ்துவரோ விவாகரத்து பெற வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும் ;ஆனால் இஸ்லாமியருக்கு என்றால் நீதிமன்றத்துக்கு வரத் தேவையில்லை; அவர்களுக்கு மட்டும் ஷரியத் என்ற ஒரு சட்டம்; அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றால், அது எப்படி இருக்கிறது என்ற கேள்வி சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
uniform civil code
uniform civil code

திருமணம், மற்றும் சொத்தில் வாரிசுகளுக்கான உரிமை, தத்தெடுத்தல் இந்த மாதிரியான பிரச்னை நீதிமன்றத்துக்கு வரத் தேவையில்லை.. எல்லாம் ஷரியத் சட்டம் பார்த்துக் கொள்ளும் என்ற அம்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் செயல்படுவதால்தான், முத்தலாக் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி பிரச்னை செய்து வருகின்றனர் என்பதை சமூகத் தளங்களில் கருத்தாகப் பதிவிட்டுள்ளனர்.

மேலும், ஷரியத் சட்டத்தை கொண்டு வந்ததே பிரிட்டிஷ்காரர்கள் தான் என்றும், ஹிந்துவும் இஸ்லாமியரும் ஒன்றாகச் சேர்ந்து பிரிட்டிஷாருக்கு எதிராக வரக்கூடாது என்பதற்காகக் கொண்டு வரப் பட்டதுதான் இந்தச் சட்டம். சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்து போகும்போது இன்றும் பிரிட்டிஷ்காரன் எழுதி வைத்த சட்டத்தை நாம் தலையில் சுமப்பது வெட்கக் கேடான விஷயம் என்று தங்கள் கருத்துகளை பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஒரே சிவில் சட்டம் உள்ள ஒரே மாநிலம் கோவா!பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டுப் போன பின்னர், டச்சுக்காரர்கள் கோவாவை சிறிது காலம் கையில வைத்திருந்தார்கள். அந்தக் குறைந்த காலகட்டத்தில் பிரிட்டிஷார் கொண்டு வந்த ஷரியத் சட்டத்தை அவர்கள் தூக்கி எறிந்தார்கள்.

ஆனால் இந்திய மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகளால் குறிப்பாக காங்கிரஸால் இந்தச் சட்டத்தை தூக்கி வீச பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை செய்யவில்லை. இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாருக்காக ஆட்சி நடத்தினார்கள் என்பது, இப்போது ஒவ்வொரு இந்தியருக்கும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று வாய்கிழியப் பேசும் எவருமே, ஏன் இந்தியாவில் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப் பட வேண்டும் என்று பேசுவதில்லை? அப்படி என்றால், மதச்சார்பின்மையின் பொருள் தான் என்ன? அல்லது இத்தகையவர்களின் மதச்சார்பின்மையின் அளவுகோல் என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்!

இந்தியா இந்துக்களின் நாடு என்றும் இந்து நாடு என்றும் 1947லேயே அன்று இருந்தவர்கள் தீர்மானித்து, அரசியல் சட்டத்தை இயற்றியிருந்தார்கள் என்றால், சிறுபான்மையினருக்கான சலுகைகள் வழங்குவதை நாம் ஏற்றிருக்கலாம். ஆனால், நாடு மதசார்பற்ற நாடு என்று அரசியல் சட்டம் குறிப்பிடும் போது, ஏன் மதத்தின் பெயரால் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டு, வரம்புகடந்த சலுகைகளை அரசாங்கங்கள் கிறிஸ்துவ இஸ்லாமியருக்கு வழங்குகின்றன என்ற கேள்விக்கு அறிவார்ந்த பதிலை எவரும் அளிப்பதில்லை. ஓட்டுப் பிச்சைக்காக, ஒரு கூட்டத்தை அப்படியே வளர்த்து விட்டு ஆட்சிக்கு வருவதிலேயே குறியாக இருந்த கட்சிகள், வருங்கால சந்ததிகளை மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு துரோகம் இழைத்து வந்தவை தான் என்பதை இன்று அந்தப் பெரும்பான்மை மக்களில் சிந்திக்கத் தெரிந்த வெகு சிலர் உணரத் தலைப் பட்டிருக்கிறார்கள்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

ஜனசங்கம் தொடங்கிய காலம் முதல் ஒரே சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள், நாட்டின் மீதான அக்கறை உள்ளவர்கள். ஜனசங்கத்தைப் பின் தொடர்ந்து அந்த பாஜக.,வின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ஒரே சிவில் சட்டம் என்பது.

பாஜக.,வின் அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இந்த அம்சம் நிச்சயம் இருக்கும்! அந்த அம்சத்தை இப்போது நிறைவேற்ற வாய்ப்பு அமைந்திருக்கிறது. நிச்சயமாக இந்த அரசு, இந்த நேரத்தில், அனைத்துத் தடைகளையும் உடைத்து, ஒரே சிவில் சட்டம் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும்!

நீதிமன்றமும் அதற்கான முதல் படியை எடுத்துக் கொடுத்து, பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. எனவே ஆகஸ்ட் 5 ஆம் தேதி புதிய அறிவிப்பு வர வாய்ப்புகள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். என்ன ஆனாலும் இந்த வருட இறுதிக்குள் ஒரே சிவில் சட்டம் இந்திய நாட்டில் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை பெரும்பான்மை மக்களிடையே எழுந்திருக்கிறது.

370வது சட்டப் பிரிவு, சிஏஏ, விவசாய மசோதா என்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப் பட்ட சட்டங்களைப் போல், இதுவும் நிறைவேற்றப் படும் என்ற நம்பிக்கை, கடந்த கால அரசியல் சூழல்களைப் பார்த்துவிட்ட மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


இந்த நிலையில் தான், பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தில்லி உயர் நீதிமன்றம் ஒரு கருத்தை வலியுறுத்தியது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அரசமைப்புச் சட்டத்தின் 44ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள நம்பிக்கை, வெறும் நம்பிக்கையாகவே போய்விடக் கூடாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மதம், ஜாதி போன்றவற்றால் பாரம்பரியமாக ஏற்படும் தடைகள் மெல்ல மெல்ல மறைந்து, ஒரே சீரான சமூகமாக நவீன இந்திய சமூகம் பரிணமித்து வருவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

திருமணம், விவாகரத்து தொடர்பான வெவ்வேறு வகையான குடும்ப சட்டங்களால், மக்கள் அலைக்கழிப்புகளுக்கும் முரண்பாடுகளுக்கும் ஆளாகக் கூடாது என்றும், ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்கள் அத்தகைய சிக்கல்களுக்கு தற்போது ஆளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Supreme Court1
Supreme Court1

இதன் தொடக்கமும் பாஜக.,தான். நாடு முழுதும் அனைத்து மதங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு ஒரே சட்டம் இயற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

பாஜக., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டதாவது…

முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சிக்கள் ஆகியோர் தங்கள் வழிபாட்டு தலங்களை உருவாக்கி பராமரிக்கும் உரிமைகளை பெற்றுள்ளனர். ஆனால் ஹிந்து, ஜைனம், புத்தம் மற்றும் சீக்கியர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் வழிபாட்டு தலங்களை உருவாக்கி, பராமரிக்கும் உரிமையை வழங்கும் அரசியல் சாசன சட்டம் 26வது பிரிவுக்கு எதிரானது.

நாட்டில் உள்ள ஒன்பது லட்சம் கோவில்களில், நான்கு லட்சம் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் ஒரு தேவாலயம் அல்லது மசூதி கூட அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தேவாலயம் மற்றும் மசூதி நிர்வாகங்கள் புரியும் தொண்டுகளுக்கு வரி வசூலிப்பது இல்லை. அதே நேரம், ஹிந்து கோவில்கள், அவற்றின் வருவாய்க்கும், தொண்டுப் பணிகளுக்கும் 13 – 18 சதவீதம் வரி செலுத்துகின்றன.

இந்த பாகுபாட்டுக்கு 1951ம் ஆண்டின் ஹிந்து அறநிலையச் சட்டமும், அதுபோல மேலும் பல சட்டங்களை அவ்வப்போது மாநில அரசுகள் இயற்றியது தான் காரணம். இந்தச் சட்டங்கள் காரணமாக, 15 மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்கள் உள்ளன.

எனவே முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு உள்ள உரிமை போல, ஹிந்து மதத்தினருக்கும், அரசின் தலையீடின்றி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கவும், பராமரிக்கவும் உரிமை வழங்க வேண்டும். இது தொடர்பான தற்போதுள்ள சட்டங்கள் பாரபட்சமாக உள்ளன. எனவே அனைத்து மதங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு பொதுவான விதிமுறைகளுடன் சட்டம் இயற்ற, மத்திய அரசு அல்லது சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்துகள் இப்போது நீதிமன்றங்களின் மூலம், சட்ட வரைவுக்கு தூண்டுகோலாக அமையக் கூடும்! அதன் மூலம் இத்தனை நாட்களாக வஞ்சிக்கப் பட்டுள்ள, இந்திய மண்ணின் தன்மையில் கிளைத்த பெரும்பான்மை இந்து சமய மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு ஒரு விடிவு காலமாகவும் இருக்கக் கூடும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img