‘அரசை நம்புபவன் முட்டாள்’ என்று தலைமைச் செயலக வாசலில் அரசே போர்டு வைத்தது போல..!

Published:

srirangam evr statue - 2026

தலைமைச் செயலக வாசலில், அரசு மக்களுக்கானது அல்ல… இந்த அரசை நம்புபவன் முட்டாள் என்று அரசே போர்டு வைத்தால் சரியானதாக இருக்குமா?

அப்படித்தான், அரசு நிர்வாக அறநிலையத்துறை, தான் நிர்வகிக்கும் ஆலய வாசலில் அதன் இறையாண்மையை கேள்வி எழுப்பி, இந்த ஆலயங்கள் ஆலய தெய்வங்கள் எல்லாம் பொய், இங்கு வருபவன் முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவதூறு பேசி, அசிங்கப்படுத்தி, அதேநேரம், ஆலயத்துக்கு வருபவர்களிடம் கண்காட்சிக்கான டிக்கெட் விற்று வசூல் வேட்டை நடத்தும் குரூரத் தனத்தை செய்து வருகிறது!

எனவேதான் ஆலயங்கள், ஹிந்து தெய்வ வழிபாடுகள், ஆன்மிகம் இவற்றுக்கு விரோதமானது எங்கள் கொள்கை என்று கூறுபவர்கள் ஆலயத்தை நிர்வாகம் செய்ய அருகதையற்றவர்கள் என்கிறார்கள் இந்து இயக்கத்தினர். எனவேதான் ‘திராவிட மாடல் அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு’ என்று அவர்கள் கூக்குரலிடுகிறார்கள்.


அண்மையில், சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசிய பேச்சு இத்தகைய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அவர் தனது பேச்சில், கடவுள் மறுப்பு வாசகங்களுடன், கோவில்கள் முன்பு ஈவெரா., சிலைகள் இருப்பது நியாயமா இன்று கேட்டது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்து முன்னணி அமைப்பினர் நடத்திய ஹிந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணத்தின் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய, சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், ஹிந்து முன்னணி கலை, இலக்கியப் பிரிவு செயலருமான கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கநாதரை வழிபட ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோவிலின் எதிரே கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள்’ என்று பேசினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

இதற்கு திமுக., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கனல் கண்ணனை கைது செய்யக் கோரி திமுக., ஆதரவாளர்கள் புகார் அளித்தனர். இதை அடுத்து கனல் கண்ணனை கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் பரவின.

kanalkannan - 2026

இந்நிலையில், கனல் கண்ணனுக்கு ஆதரவாக தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டார். ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் திமுக.,வினர் அதை கருத்து சுதந்திரம் என்கின்றனர். அதே கருத்து சுதந்திரம் கனல் கண்ணனுக்கும் உண்டு. ஸ்ரீரங்கம் கோவில் எதிரே ஈவெரா., சிலை இருக்க வேண்டுமா என்று, அங்கு வரும் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். பொது இடங்களில் அவரது சிலையை வைத்துக் கொள்ளட்டுமே என்று கூறினார் அண்ணாமலை.

பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா இது குறித்து கருத்து தெரிவித்த போது, ‘ஈவெரா., சிலைக்கு கீழே கடவுள் இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவிலுக்கு முன்பு இப்படிப்பட்ட வாசகங்களுடன் ஈவெரா., சிலை இருப்பது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் திட்டமிட்ட செயல். எனவே இந்த வாசகங்களை நீக்க வேண்டும். கனல் கண்ணனின் கருத்துரிமை காக்கப்பட வேண்டும் என்றார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறிய போது, ஈவேரா., சிலைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. கடவுள் நம்பிக்கையாளர்களை இழிவுபடுத்தும் வாசகங்களுடன் கோவில்கள் முன்பு ஈவேரா., சிலைகள் இருப்பதைத்தான் எதிர்க்கிறோம். கனல் கண்ணன் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

அந்த வகையில், அரசின் அதிகாரபூர்வ அமைப்பான அறநிலையத்துறை நிர்வகிக்கும் ஆலயங்களின் முகப்பில், இது போல், அந்தத் துறையையும் அந்தத் துறை கையாளும் விஷயங்களையும் மறுதலித்தும் எதிர்த்தும் கூறப்பட்டுள்ள கருத்துகளை அரசே வைத்து விளம்பரப்படுத்தியிருப்பது, அரசு தனக்குத்தானே தன் முகத்தில் சாணி அடித்துக் கொள்ளும் செயலே!

ஒவ்வொரு மாநிலங்களும் ஆன்மிகச் சுற்றுலாவை மக்களிடம் விளம்பரப் படுத்தி, வருவாயைப் பெருக்குகின்றன. எண்ணற்ற ஆலயங்களுள்ள தமிழகத்தில் மட்டுமே நல்ல முறையில் விளம்பரப் படுத்தாமல், ஆலயங்களுக்கு வரும் ஆன்மிக அன்பர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் மோசமான விளம்பரங்கள் அரசு மற்றும் அரசின் நிர்வாக அமைப்புகளாலேயே செய்யப் படுகின்றன. இது மாற வேண்டும். இல்லாவிட்டால், ஆட்சி மாற்றம் மட்டுமே ஒரே வழி என்ற பொது எண்ணத்தை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது!

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img