
பள்ளிகள் திறப்பு தாமதமானதால், 10 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த பெரும்பாலான பள்ளிகள் முடிவு செய்ததை எடுத்து இன்று முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் ஜூன் 14ம் தேதியும் திறக்கப் படும் என்று அமைச்சர் நேற்று அறிவித்தார்.
பள்ளிகள் திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்காததால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு, நேற்றே அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. நேற்று மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் வகுப்புகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படிக்கத் தொடங்கினர்.
பள்ளிகள் திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.