spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்‘கொரோனா’ கொண்டு போன... மயிலை ஜன்னல் கடை ரமேஷ்!

‘கொரோனா’ கொண்டு போன… மயிலை ஜன்னல் கடை ரமேஷ்!

- Advertisement -
mylapore jannal bajji shop
mylapore jannal bajji shop

ஜன்னல் கடை மயிலாப்பூரிலும் வாழ்விலும் உணர்விலும் ஒன்றிய ஒன்று. பல வருடங்களாக அந்த ஜன்னல் ஒன்றிலேதான் வியாபாரம். மற்ற ஓட்டல்கள் தோன்றி பல லட்ச லாபம் கண்டு பல கிளைகைளை திறந்த பின்னும் அதே இடத்தில் லாபம் பார்க்காத திரு சிவராமகிருஷ்ணன் (ரமேஷ்) நடத்தி வந்த உணவாலயம். நேற்று கொரோனாவில் அவர் தவறி விட்டார் என்று கேட்டதிலிருந்து துக்கம் தொண்டையை அடைக்கிறது.

பலரும் ஆபீசிலிருந்து வந்து பசியோடு சாப்பிடும் இடம். கொஞ்சம் இரும்மா. ஆபிஸ்லேருந்து வரவா பசியோட இருப்பா. அவாளுக்கு இட்லி தோசைக்கு அப்புறம்தான் பஜ்ஜி ஆரம்பிப்பேன் என்பார். அதற்காக காத்திருக்கும் கூட்டம் உண்டு.

அந்த பஜ்ஜியும் முறுமுறுவென்று அப்படி ஒரு டேஸ்ட். எந்த ஓட்டலிலும் இந்த சுவை கிடைக்காது. அதே போல வித்தியாசமான அந்த சட்னி. பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, வெங்காயம் என்று ஒவ்வொன்றும் தரமானதாக வாசனையோடு இருக்கும். சாம்பாரும் சுவை.

குழந்தைகளுக்கு இந்தக் கடை பஜ்ஜியும் சட்னியும் ரொம்ப பிடிக்கும். எவ்வளவோ முறை சாப்பிட்டிருக்கிறோம். “பாட்டி இன்னிக்கு தோசைக்கு ஜன்னல் கடை சட்னி பண்ணுபாட்டி” என்று அம்மாவை படுத்துவார்கள். அம்மாவும் பலமுறை முயன்று அதே போல சட்னி செய்யப் பழகிவிட்டாள். குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்றால், “இங்க பாரு ஜன்னல் சட்னி..” என்று டெம்ப்ட் செய்து ஊட்டி விடும் அளவுக்கு ஒரு ப்ரான்ட் ஜன்னல் கடை.

இன்று வரை தேங்காய் வெங்காயம் வைத்து அரைக்கும் அந்த சட்னியின் பெயர் எங்கள் வீட்டில் ஜன்னல் சட்னிதான். அதில் பச்சை மிளகாய் வாசனையும் காரமும் தூக்கலாக இருக்க வேண்டும். பச்சை மிளகாயை லேசாக எண்ணெயில் வதக்கி அரைத்தால் இந்த சுவை அபாரமாக இருக்கும். ஜன்னல் மாமா என்று குழந்தைகள் அன்புடன் அழைக்கும் அவர் எப்படி செய்வாரோ அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியாது. சுமாராக அதைப் போல செய்ய முடிந்தது. ஆனாலும் அவர் கடை பஜ்ஜிக்கும் சட்னிக்கும் ஈடாகாது. அதே போல போண்டா, உருளைக் கிழங்கு போண்டா ஒவ்வொன்றும் சுவை.

நல்ல தரமானதாக இருக்கும். வயிற்றுக்கும் ஒன்றும் பண்ணாது. சுத்தமும் கூட. ஒரு தட்டில் பிளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் வைத்துத் தருவார். சாப்பிட்ட பின் அதை அவர் வைத்திருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு தட்டை அலம்பித் தர வேண்டும்.

அப்பா மாலை வேளைகளில் காலார நடந்து வாங்கி வருவார். என் மாமனார் ஊரிலிருந்து வந்தால் சாயங்காலம் காலாரச் சென்று மாமாவுடன் பேசிவிட்டு பஜ்ஜியுடன் வந்து நிற்பார். அவ்வளவு பிரியம். மாமனார் கிளம்பினாலே அம்மா, “மாமா பஜ்ஜி கடைக்கு கிளம்பியாச்சு” என்று சொல்வாள். ஆளாளுக்கு மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய், உருளைக் கிழங்கு என்று ஆர்டர் சொல்வோம். வாங்கி வந்த பின் மாமனார், மாமியார், மச்சினர், குழந்தைகள், அம்மா,அப்பா நாங்கள் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம். நாத்தனார் வந்தாலும் அதே.

அம்மா அப்பாவைப் பார்க்கப் போகும் போது வழியில் இருப்பதால் சிலசமயம் வாங்கிச் செல்வதுண்டு.
பெரியவன் டிசம்பரில் அமெரிக்காவிலிருந்து வந்த போது கூட போய் மாமாவிடம் அன்போடு விசாரித்துவிட்டு பஜ்ஜி சாப்பிட்டு விட்டு வந்தான். ஸ்கூட்டரில் சட்டென்று போய் வருவான். பாலு சாரை கூட ஒரு முறை இங்கே அழைத்துப் போயிருக்கிறான். சின்னவனுக்கு அந்த உருளைக் கிழங்கு பஜ்ஜி ரொம்ப பிடிக்கும். அதற்காக காத்திருப்பான். நண்பர்களையும் அழைத்துச்செல்வோம். இப்படி குடும்பத்தோடு ஒன்றிய கடை.

பல முறை நானும் விகேஎஸ்சும் வெளியே போய்விட்டு பசியோடு வரும்போது சட்டென்று “ரெண்டுபஜ்ஜி சாப்டுட்டு போயிடலாம். ராத்திரிக்கு ஏதாவது பண்ணிக்கலாம்.” என்று ஸ்கூட்டரைத் திருப்பிப் போய் சாப்பிட்டு வருவோம். முடியாத பல சமயங்களில் இட்லி, தோசையும் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம். மெத்தென்று இருக்கும் தோசை.

குழந்தைகளுக்கு பஜ்ஜி பார்சல் வாங்கினால் சட்னி போதும் மாமா. சாம்பார் வேணாம் என்றால், “இந்தாம்மா. சாம்பார் வைச்சிருக்கேன். ராத்திரி தோசை வாத்தா இதை தொட்டுண்டு சாப்டலாமே. இல்ல ஒரு சாதம் வைச்சு இதை போட்டுண்டு சாப்பிடு. ஏன் வேணாங்கற” னு ரெண்டு பாக்கெட் பையில் போட்டுத் தருவார். இந்த அக்கறை எந்த ஓட்டலில் கிடைக்கும்?

நல்ல மனிதர். பலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பின்னால் யாராவது ஏழை வந்தால் கண்ணாலேயே பார்த்து விடுவார். உடனே சுடச் சுட பஜ்ஜியோ போண்டாவோ கட்டி அவர்களிடம் கொடுக்கச் சொல்வார். அதற்காக சில ஏழைப் பெரியோர்கள் தயங்கித் தயங்கி வருவதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கேட்க யோசிக்கும் முன்னே இவர் கொடுத்து விடுவார்.

“ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டாதீங்கோ. இப்பதானே கடை ஆரம்பம்.”
“இந்தாப்பா எச்சலை அப்படி தள்ளி அலம்பு.”
“பஜ்ஜி லேட்டாகும். வெயிட் பண்ணினா கிடைக்கும்…”

அவர் கணீர் குரல் காதில் ஒலிக்கிறது. வெயிட் பண்ணா இனி கிடைக்குமா?
———
AGs ஆபீசில் வேலையில் இருப்பவர். மாலை இரண்டு மணி நேரம் மட்டும்தான் இந்தக்கடை. 3 பஜ்ஜி Rs. 20.

  • வல்லபா ஸ்ரீனிவாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe