
அண்ணா என் உடைமைப் பொருள் – 4
என் பெயரே கண்ணில படாத மாதிரி பண்ணிட்டியே!
– வேதா டி. ஸ்ரீதரன் –
அந்நாட்களில் திவ்ய வித்யா ட்ரஸ்டின் ப்ரின்டிங் தேவை நான் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. எனவே, அண்ணாவைச் சந்தித்துத் திரும்பிய பின்னர் ரொம்ப நாட்கள் கழித்துத்தான் முதல் புத்தக ஆர்டர் கிடைத்தது. அப்போதும் கண்ணனுடன்தான் அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். இதுதான் அண்ணாவுடன் எனது இரண்டாவது சந்திப்பு.
அச்சிட வேண்டிய புத்தகத்தின் பெயர், காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்.
உள் பக்கங்களுக்கான லேசர் ப்ரின்ட் அவுட் ரெடி. நேரடியாக ஃபிலிம் எடுத்து விடலாம்.
அட்டையில் போடுவதற்கான. பெரியவா படத்தையும், உள்ளே கலர் பக்கத்துக்கான பெரியவா பாதம் படத்தையும் அண்ணா என்னிடம் தந்தார். புத்தகத்தின் தலைப்பு, அண்ணா பெயர், பெரியவா படம் மூன்றையும் டைப்செட் பண்ணி, உரிய இடத்தில் போட்டு முன், பின் அட்டைப் படங்களையும் உள்ளே வரும் கலர்ப் பக்கத்தையும் நான் ரெடி பண்ண வேண்டும்.
புத்தகத்தின் முன் அட்டையில் ரா. கணபதி என்ற பெயர் நன்றாகப் பெரியதாகவும், பளிச்சென்று தெரிவது போலவும் இருக்க வேண்டும் என்று அண்ணா என்னிடம் கூறினார். ‘‘புத்தகம் பெரியவா பத்தினது தான். பெரியவாளைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கறவாதான் வாங்கப் போறா. இருந்தாலும் புத்தக ஆசிரியர் பெயருக்கும் ஒரு வால்யூ இருக்கு. ரா. கணபதிங்கற பெயரைப் பார்த்துட்டு வாங்கறவாளும் இருப்பா. அதனால, என்னோட பெயரும் நன்னா பளிச்சுன்னு தெரியறா மாதிரி போடு’’ என்று தெரிவித்தார்.
நானும் சரி என்று சொல்லி, லேசர் ப்ரின்ட் அவுட்டுகளை வாங்கிக் கொண்டேன்.
ப்ரின்ட் அவுட்டுகளுடன் நேரே ஶ்ரீசக்ராவுக்கு வந்தேன். ஃபிலிம் எடுப்பதுதான் முதல் வேலை. இதற்கு சுமார் நாலைந்து மணி நேரம் ஆகும்.
இந்த ஆர்டர் வரும் வரை சக்ராவில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இருநூற்றைம்பது ரூபாய் பில் அளவுக்குக் கூட ஃபிலிம் எடுக்கும் வேலை கிடைக்காது. பல நாட்களில் நூறு ரூபாய்க்கும் குறைவாகவே வேலை இருக்கும்.
ஆனால், அன்று வேலை மிக மிக அதிகமாக இருந்தது. சுமார் ஆயிரத்தி இருநூறு ரூபாய்க்கு மேல் வேலை நடந்தது. இரவு ஒன்பது மணி வரை வேலை தொடர்ந்தது. எனவே, அண்ணா புத்தகம் ஃபிலிம் எடுக்க முடியவில்லை. மறு நாளும் அதேபோன்ற நிலை. மூன்றாவது நாளும் அதே நிலை.
எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பெரிய மகானின் புத்தக ஆர்டர் கிடைத்திருக்கிறது. அதனால், நமது வியாபாரம் அமோக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் அச்சமும் ஏற்பட்டது. முதன்முதலாக அண்ணா புத்தகம் அச்சிடும் ஆர்டர் வந்துள்ளது. ஃபிலிம் எடுப்பதில் சுமார் ஐநூறு ரூபாய் லாபம் கிடைக்கும். அதுபோக, அச்சு வேலைகளுக்கான கமிஷன் வகையில் சுமார் நாலாயிரம் ரூபாய் கிடைக்கும். இவற்றையெல்லாம் விடப் பெரிய விஷயம், திவ்ய வித்யா ட்ரஸ்டில் இருந்து இன்னும் நிறைய புத்தக ஆர்டர் எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை.
ஃபிலிம் எடுப்பது எங்கள் அலுவலகத்தில் நடைபெறுகிற வேலை. ஆனால், அச்சிடுவது வேறிடத்தில். அவர்கள் எந்தக் காலத்திலும் உரிய நேரத்தில் வேலை முடித்தது இல்லை. இதனால் வேலை ரொம்பவும் தாமதமானால் அண்ணாவிடம் நற்பெயர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
நான்காவது நாள் சுமார் இரண்டாயிரம் ரூபாய் அளவுக்கு ஃபிலிம் வேலை வந்தது. எனவே, அன்றும் அண்ணா புத்தகத்துக்கான ஃபிலிம் எடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் அன்று இரவு அலுவலகத்தில் தங்கி அண்ணா புத்தகப் பக்கங்களுக்கான ஃபிலிம்கள் எடுத்து முடித்தோம்.
(இதன் பின்னர் பெரும்பாலும் சக்ராவில் தினசரி ஃபிலிம் வேலைகள் பெருமளவு நன்றாகவே நடந்தன. இது அண்ணாவின் அனுக்கிரகம் என்றே நாங்கள் நம்பினோம்.)
புத்தக உருவாக்கத்தில் இன்னொரு முக்கிய வேலை புத்தக அட்டைக்கான ஃபிலிம் எடுப்பது. இது நான்கு வண்ணங்களில் அச்சிடப்படும். இதற்கான ஃபிலிம்கள் எடுக்கும் வேலையை ஸ்கேனிங் என்று சொல்லுவார்கள். இந்த வேலையை வடபழனியில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் கொடுத்திருந்தோம். அந்த வேலையும் முடிந்து ஃபிலிம் வந்தாகி விட்டது.
ஒருவழியாக புத்தக உள் பக்கங்கள் ப்ரின்டிங் முடிந்து அட்டைப்படம் அச்சிடும் வேலை ஆரம்பமானது. மொத்தம் நான்கு வண்ணங்கள் அச்சிட வேண்டும். பெரும்பாலும் இந்த வேலைக்கு நான்கு கலர்களையும் ஒரே நேரத்தில் அச்சிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், அந்த அச்சகத்தில் சிங்கிள் கலர் இயந்திரம்தான். எனவே, ஒரே காகிதத்தை நான்கு தடவை திரும்பத் திரும்ப அச்சு இயந்திரத்தில் செலுத்தி அச்சிட வேண்டும்.
இந்தப் புத்தக அட்டையின் முதல் இரண்டு கலர்கள் அச்சிட்ட பின்னர் மூன்றாவது கலர் அச்சு ஆரம்பமானது. அப்போது அட்டைக்கான ஸ்கேனிங்கில் ஏற்பட்டிருந்த பெரிய கோளாறு தெரிய வந்தது. ப்ரின்ட் ஆன காகிதத்தில் அண்ணாவின் பெயரும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும் ஒரே வண்ணத்தில் இருந்தன. இதனால் அண்ணாவின் பெயரே வெளியே தெரியாத மாதிரி ஆகிவிட்டது. இந்தப் பிரச்சினைக்குக் காரணம் அண்ணாவின் பெயர் எத்தகைய வண்ணத்தில் வர வேண்டும் என்பதற்காகக் கொடுத்த குறிப்புகள்தான் என்பது புரிந்தது.

இப்போது இதைச் சரி செய்வதென்றால் எங்களுக்குக் கிடைக்கும் கமிஷன் தொகையை விட அதிகத் தொகை செலவு செய்தாக வேண்டும். அல்லது, அப்படியே விட்டு விடலாம். லாபம் கிடைக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. நஷ்டத்தைத் தாங்கும் நிலையில் நாங்கள் இல்லை. எப்படியும் கண்ணன் போன்ற ஒரு மனிதர் நாலு திட்டுத் திட்டினாலும் கோபத்தில் பணம் தராமல் இருக்கப் போவதில்லை. மன வருத்தம் இருந்தாலும் இந்தத் தவறை யாரும் குற்றமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று நான் நம்பினேன்.
எனவே, அதே லட்சணத்தில் அட்டையை முடித்து புத்தகப் பிரதிகளை திவ்ய வித்யா ட்ரஸ்ட் அலுவலகத்தில் டெலிவரி பண்ணினோம்.
ஐந்து பிரதிகள் மட்டும் எடுத்துக் கொண்டு தயக்கத்துடன் அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். புத்தகப் பிரதியை எடுத்துப் பார்த்ததுமே அண்ணா, ‘‘என்னப்பா இது என்னோட பெயரையே காணோம்!’’ என்றார்.
நான் அசடு வழிந்தேன். தவறு என் மீது தான் என்பதை ஒப்புக் கொண்டேன். நான் திட்டு வாங்குவதற்குத் தயாராகவே இருந்தேன். ஆனால், அண்ணா திட்டவில்லை. பெரிதாகச் சிரித்தார். ‘‘என் பெயரை ப்ராமினென்ட்டா போடச் சொன்னேன். நீயானா பெயரே தெரியாத மாதிரி போட்டுட்டே. சந்தோஷம்’’ என்றார்.
என்னைத் திட்டாமல் இருந்தது அவரது பெரிய மனிதத் தன்மையாக இருக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால், அவர் முகத்தில் வருத்தத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லை என்பதை நான் கவனித்தேன். அவரது சிரிப்பு யதார்த்தமாக இருந்தது. எனது மனம் வருத்தப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக அவர் ஒப்புக்குப் பேசியதாக என்னால் நினைக்க முடியவில்லை.
அன்றைய தினம் இதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், இதன்பின்னர் பல முறை அண்ணாவிடம் இதே விஷயத்தைக் கவனித்திருக்கிறேன்: அண்ணா தனது பெயரை ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை.
அண்ணா மறைந்த பின்னர், அண்ணா செய்த பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லி ஒரு பிரபலமானவர் என்னிடம் ரொம்பக் குறைப்பட்டுக் கொண்டார்.
நல்ல வேலை செய்பவர்களை இந்த சமுதாயம் மதிப்பது இல்லை என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக நான் அவரிடம் தலையாட்டி வைத்தேன்.
அவர் கிளம்பியதும், ‘‘அண்ணாவுக்கு இந்த சமுதாயம் எத்தகைய அங்கீகாரத்தைத் தந்திருக்கும்?’’ என்று எனக்குள் யோசித்துப் பார்த்தேன். ஏதாவது அமைப்புகள் பணமுடிப்புக் கொடுத்திருக்கலாம், விருது, பட்டயம் என்று ஏதாவது கொடுத்திருக்கலாம். அல்லது, இதுபோன்று வேறு ஏதாவது செய்து அவரை ஒரு பொதுவெளியில் பாராட்டி இருக்கலாம். இதற்கு மேல் வேறு என்ன செய்திருப்பார்கள்?
இதுபோன்ற எதையுமே அண்ணா ஒரு பொருட்டாக மதித்ததில்லை. அதிலும், அவரை மேடையில் உட்கார்த்தி வைத்து இவரைப் போல யாருண்டு என்ற ரீதியில் யாராவது பேசினால், அது அண்ணாவுக்கு வழங்கப்பட்ட கௌரவமாக இருக்காது, உச்சபட்ச தண்டனையாகவே இருந்திருக்கும்.
இத்தகைய அங்கீகாரங்களில் ஓரிரண்டை அண்ணா பெற்றுக் கொண்டதும் உண்டு. அதற்குக் காரணம் விருது வழங்கிய அமைப்புகளின் மீது அவருக்கு இருந்த மரியாதையும், அந்த அமைப்புகளுக்கு சமுதாயத்தில் இருக்கும் நற்பெயரும்தான்.
இத்தகைய அமைப்பு வழங்கும் அங்கீகாரத்தை நாம் மறுத்தால் அது அந்த அமைப்பின் கௌரவத்துக்கு ஹானி விளைவிக்கும் செயல் என்று அவர் நினைத்ததால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.
அண்ணாவின் கடைசி காலத்தில் இதுபோல வழங்கப்பட இருந்த ஒரு விருதை அவர் நேரில் சென்று வாங்க முடியாததால் என்னை நேரில் போய் வாங்கி வருமாறு கூறினார். அந்த விருதுடன் பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையாகத் தருவார்களாம். நானும் சம்மதம் தெரிவித்தேன். விழாவுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை, தேதி தெரிய வந்ததும் சொல்கிறேன் என்றார். அதற்கடுத்து அவரும் எதுவும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.
சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் அவருக்கு அருகே புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த குட்டி மேசையின் அடிப்பகுதியில் அந்த விருதுக்கான கேடயம் அனாதையாகக் கிடந்ததைப் பார்த்தேன். அது எப்போது வழங்கப்பட்டது, யாரும் போய் வாங்கி வந்தார்களா அல்லது அந்த அமைப்பினர் யாராவது வந்து கொடுத்தார்களா என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. அந்தக் காலகட்டத்தில் அண்ணாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த அன்பர்களிடம் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் பிரியமில்லை.
விருதுப் பணம் பத்தாயிரம் ரூபாயை அண்ணா என்ன பண்ணினார் என்பது தெரியாது. ஆனாலும், அண்ணாவிடம் வரும் பணம் ரிஷி கர்ப்பத்துக்கு ஒப்பானது என்பது மட்டும் தெரியும்.
அண்ணாவைப் பற்றி எழுதுவதில் எனக்கு ஏற்பட்ட தயக்கத்துக்குக்கான காரணத்தை அனைவருமே இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
.. தொடரும் …


