
எங்கள் ஆசான்..!
–கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்-
(ஆசிரியர், கலைமகள்)
பன்முகத் தன்மைகொண்ட இலக்கிய ஆளுமை கி வா ஜகந்நாதன் அவர்கள் திருக்குறளுக்கு ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. கோயமுத்தூர் ராமகிருஷ்ணா மிஷினுக்காக திருக்குறள் ஆராய்ச்சி உரையைச் சிறப்பான முறையில் தயார் செய்தவர். அவிநாசிலிங்கம் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த உரையை சுமார் ஏழு ஆண்டுகள் உழைத்து தயார் செய்தார். பல அறிஞர் பெருமக்களின் கருத்துரைகளைத் தொகுத்துத் தந்ததோடு தன்னுடைய எண்ணங்களையும் பதிவு செய்து இலக்கண குறிப்பு களையும் தந்து உள்ளார். திருக்குறளில் முழுமையாகத் தேர்ச்சி பெற இந்த நூலை நாம் அவசியம் படிக்க வேண்டும்.
சிலேடையாகப் பேசுவதில் கி வா ஜ வல்லவர் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஒருமுறை இவரைச் சந்திக்க ஒரு பலசரக்குக் கடைக்கரர் வந்தார். தன்னுடைய கடையில் இராமபிரான் படத்தை மாட்டுவதா? இல்லை விநாயகர் லஷ்மி அடங்கிய படத்தை மாட்டுவதா? என்று ஆலோசனை கேட்டார்.
“உங்கள் கடையில் உங்கள் வசதிக்கு ஏற்ப எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டுங்கள் ஆனால் கலப்படம் மட்டும் செய்யாதீர்கள்” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் இவர் திருவாய் மலர்ந்த போது பக்கத்தில் உள்ள நண்பர்கள் எல்லோரும் கைதட்டி சிலேடையை ரசித்தார்களாம்.
உ.வே.சாமிநாதய்யரின் தலைமை மாணாக்கர் இவர். தமிழ்த் தாத்தா அவர்கள் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. என் சரித்திரம் தமிழ் தாத்தாவால் எழுதப்பட்டது என்றாலும் அது முழுமை பெறவில்லை. சங்க இலக்கியங்களையும் ஐம்பெரும் காப்பியங்களையும் தேடித்தேடி அலைந்து கண்டுபிடித்து ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்த பெருமைக்குரிய தமிழ் தாத்தாவின் சரித்திரத்தை “என் ஆசிரியர் பிரான்”என்னும் தலைப்பில் எழுதி தமிழ் சமூகத்திற்கு தந்த இந்தப் பேரறிஞர் பல உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றியவர் ஆவார்.
நாட்டுப்புற பாடல்களையும் தமிழ் பழமொழிகளையும் தொகுத்த பெருமை இவருக்கு உண்டு! “1960களில் கணினி வசதி எல்லாம் கிடையாது. அகர வரிசைப்படி பழமொழிகளைத் தொகுப்பதற்காக ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பெட்டியைத் தயார் செய்து அதற்குள் கிடைத்த பழமொழிகளைச் சேகரிப்பார். வேகமாக காற்று அடித்தாலோ அல்லது மின்வசிறி வேகமாக சுழன்றாலோ பழமொழிகள் அட்டைப் பெட்டியில் இருந்து பறந்து ஒன்றுடன் ஒன்று கலந்து விடும். மீண்டும் அவைகளைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொள்வார்”இப்படி கி.வா.ஜ அவர்களின் மூத்த மகன் சுவாமிநாதன் என்னிடம் தெரிவிக்கும்பது அவர் கண்ணில் நீர் அரும்பு கட்டியிருந்ததை நான் பார்த்ததுண்டு.
ஒரே பத்திரிகையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்த ஆசிரியராக இருந்தவர்கள் வெகுசிலரே! அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கி.வா.ஜ. கலைமகள் என்றாலே கிவாஜ அவர்களின் பெயர் தான் ஞாபகத்திற்கு வரும்.
உ வே சாமிநாத ஐயர் ஆசிரியராக இருந்த கலைமகள் மாத இதழுக்கு அவரைத் தொடர்ந்து ஆசிரியர் ஆனவர் பல தமிழ் எழுத்துலக ஆளுமைகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அகிலன் அனுத்தமா லக்ஷ்மி ராஜரத்தினம் கமலா சடகோபன் போன்ற நாவலாசிரியர்களை அறிமுகம் செய்து வைத்தது இவர்தான். இது அந்தக் காலம் என்றால் தற்காலத்தில் பிரபலமான நாவல் ஆசிரியர்களான தேவிபாலா இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோரின் முதல் படைப்பை பிரசுரம் செய்ததும் கி வா ஜ தான். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்த கோமகன் இவர் என்று சொன்னால் அது மிகையல்ல!
அபிராமி அந்தாதி திருமுருகாற்றுப்படை திருப்புகழ் பெரியபுராணம் கந்தர் அலங்காரம் என பல பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் 1967 ஆம் ஆண்டு “வீரர் உலகம்” எனும் இலக்கிய விமர்சனப் படைப்பிற்காக சாகித்திய அகதெமி விருதினைப் பெற்றார். இவருடைய திருமுருகாற்றுப் படை மற்றும் திருப்புகழ், பெரியபுராண ஆராய்ச்சி கட்டுரைகளிலிருந்து பல தமிழ் மாணவர்கள் தங்களுடைய ஆய்வுகளை கட்டுரையாக எழுதும் பொழுது மேற்கோள் காட்டுவது உண்டு. இலக்கிய நுணுக்கங்களைத் தருவதுடன் வாழ்வியல் எவ்வளவு தூரம் தமிழ் இலக்கியத்தோடு தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை சுவைபட விளக்கியுள்ளார் கந்தர் அலங்கார உரைத் தொகுப்பில்.
1928 ஆம் ஆண்டு கிவாஜவிற்கு 22 வயது ஆனபோது தான் முதல் சம்பளத்தை தோவர் துரை(ஆங்கிலேயர்) என்பவரிடமிருந்து பெற்றதாக இவரின்வாழ்க்கை வரலாற்றை எழுதிய அனந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்த முதல் சம்பளம் தோவர் துரைக்கு திருக்குறளுக்கு விளக்கங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பணிக்காகப் பெறப்பட்டது. திருக்குறள் தான் இவருக்கு முதல் வேலை வாய்ப்பையே ஏற்படுத்திக்கொடுத்தது! திருக்குறள் சொல்லிக்கொடுத்த நேரம்போக மீதி நேரத்தில் தோவர் துரை வீட்டில் இருந்த ஆங்கில பத்திரிகைகளைப் படித்து அதன் மூலமாக தன் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார் கி வா ஜ.
சிலம்புச் செல்வர் மபொ சி அவர்கள் இவருடைய இலக்கிய திறமையைக் கண்டு வியந்து பாராட்டிய அன்பர்களில் ஒருவர்.”கி வா ஜ இருக்குமிடத்தில் தமிழ் கொஞ்சும். புரியாத பல விஷயங்களுக்கு நமக்கு விடை கிடைக்கும். அவருடைய ஞாபக சக்திக்கு எல்லையே கிடையாது. அவருக்கு மிகவும் பிடித்த இனிப்பு திருநெல்வேலி பொருள் விளங்கா உருண்டை. கடலை, ஏலம், முந்திரி, வெல்லம்,தேங்காய்,பைத்தம் பருப்பு மாவு போன்ற பல பொருட்களைக் கொண்டு இந்த உருண்டையைத் தயாரிப்பதால் இதற்குப் பொருள் விளங்கா உருண்டை என்று பெயர். என்னெல்லாம் பொருட்கள் கூட்டுச்சேர்ந்து உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். பல கடினமான தமிழ் இலக்கியங்களுக்கு மிக எளிதாக பொருள்களை விளக்கிச் சொல்லும் ஆற்றல் பெற்ற இவருக்கு இந்த இனிப்பு உருண்டை பிடித்து இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை!”இப்படி ம பொ சி ஒரு கூட்டத்தில் பேசியது உண்டு.
காஞ்சி பெரியவரிடம் இவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 1932 ஆண்டு சென்னைக்கு பெரியவர் விஜயம் செய்த பொழுது அவர் ஆற்றிய உபன்யாசங்களை தினசரி குறிப்பெடுத்து ஆச்சார்ய ஸ்வாமிகளின் உபன்யாசங்கள் என்னும் தலைப்பில் நூல் ஆக்கினார். இதுதான் காஞ்சி சுவாமிகள் ஆற்றிய உபன்யாசங்களின் முதல் தொகுப்பு நூல் ஆகும். தமிழ் இலக்கியத்தில், இலக்கணத்தில் மிகுந்த புலமை பெற்றிருந்த இவருக்கு வாகீச கலாநிதி என்னும் பட்டத்தை வழங்கி காஞ்சி மகா பெரியவர் ஆசீர்வதித்தார்.
கதர் ஆடையை மட்டுமே தன் கடைசி காலம் வரை இவர் பயன்படுத்தி வந்தார். மகாத்மா காந்திஜி சுதந்திரத்திற்கு முன் சென்னைக்கு விஜயம் செய்தபோது இந்தி பிரசார சபாவில் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வரவேற்பின் போது தமிழில் வரவேற்பு மடல் எழுதும்படி தமிழ்த் தாத்தா உ வே சா அவர்களை கல்கி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்த் தாத்தா எழுதிய அந்த வரவேற்பு மடலை சபையில் படிக்கும் பாக்கியத்தைப் பெற்றார் கி வா ஜ. எப்பொழுதும் இவருடைய வாய் முருகா முருகா என்றுதான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். காந்த மலை முருகன் மீது அலாதி பிரியம் கொண்ட இவர் ஓர் தமிழ்க் கடல்.
மகாசுவாமிகளும் கி.வா.ஜ.வும்!
– திருப்பூர் கிருஷ்ணன் –
மகாசுவாமிகளுக்குத் தமிழில் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவ்வையாரின் பாடல்களை அவர் பெரிதும் மதித்தார். ஆண்டாளின் திருப்பாவையைப் போற்றிப் புகழ்ந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும் அவ்வையாரின் மகிமைகளையும் எடுத்துச் சொல்லிவந்தார்.
தமிழில் நாட்டம் கொண்டிருந்த மகாசுவாமிகள் தமிழ் அறிஞர்களிடமும் அன்பு கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் அவரைத் தேடி வருவதும் உரையாடி மகிழ்வதும் அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள். தமிழறிஞர்களிடம் பல இலக்கியச் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வது மகாசுவாமிகளின் பழக்கம்.
மகாசுவாமிகள் 1932ஆம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்த போது சுவாமிகளுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அன்று வரவேற்புப் பத்திரத்தை எழுதி வாசித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் மாணவரும் கலைமகள் மாத இதழ் ஆசிரியருமான கி.வா. ஜகந்நாதன்.
அன்றுமுதல் கி.வா.ஜ. மகாசுவாமிகளின் அடியவரானார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகாசுவாமிகளை தரிசித்தும் உரையாடியும் பயனடந்தார்.
சென்னை மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் மகாசுவாமிகள் செய்த சொற்பொழிவுகளை உடனுக்குடன் ஒரு சொல் விடாது எழுத்து வடிவில் எழுதியவர் கி.வா.ஜ. தான்.
அந்தச் சொற்பொழிவுகள் பின்னர் ஆச்சார்ய உபன்யாசங்கள் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாகக் கலைமகள் வெளியீடாக வந்தன.
கி.வா.ஜ.வின் தமிழ்ப் புலமையை சுவாமிகள் பெரிதும் மதித்தார். அவரிடம் பல பழைய இலக்கியச் செய்திகள் குறித்து உரையாடி மகிழ்வார். தன்னைத் தேடிவரும் தமிழன்பர்களை உங்கள் சந்தேகங்களை ஜகந்நாதனிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்! என சுவாமிகள் சொல்லி அவர்களைக் கி.வா.ஜ.விடம் அனுப்புவதுண்டு.
சுவாமிகள் கி.வா.ஜ.வைப் பற்றிச் சொல்லும்போது, புன்முறுவலுடன், இவர் கலைமகளுக்கே ஆசிரியர் எனச் சொல்வதுண்டு.
ஒருமுறை சுவாமிகள் அவரிடம் ஒரு விந்தையான கேள்வியைக் கேட்டார்.
சம்ஸ்க்ருதம் என்று அந்த மொழிக்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா? சம்ஸ்க்ருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி என்று பொருள். அதுபோல் தமிழுக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது எனச் சொல்லமுடியுமா?
கி.வா.ஜ. அடக்கத்துடன், சுவாமிகள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என பதில் சொன்னார்.
எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? என்ற மகாசுவாமிகள் சொல்லத் தொடங்கினார்.
`தமிழில் ழ என்ற ஒலி இருக்கிறதே, அது சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ஒலி ழகரம். அந்த ஒலி தமிழின் தனிப் பெருமை.
அந்த எழுத்தை உள்ளடக்கி வரும் சொற்கள் எல்லாம் இனிமையைக் குறிப்பதாகவே இருக்கும். அழகு, குழந்தை, மழலை, பழம் என்றிப்படி ழ வரும் சொற்கள் எல்லாமே இனியவைதான்.
ஆகையால் ழகரததைத் தம்மிடம் உடையது என்ற பொருளில் தம் + ழ் = தமிழ் என வந்திருக்கலாமோ?`
மகாசுவாமிகளின் விளக்கத்தைக் கேட்டுக் கி.வா.ஜ. ஆனந்தம் அடைந்தார்.
உங்கள் விளக்கம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது! என்றார் கி.வா.ஜ.
அந்த மகிழ்ச்சியிலும் ழகரம் இருக்கிறது! என்றார் மகாசுவாமிகள்!
குரு சிஷ்ய பரம்பரையில் வந்தவர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சிஷ்யன் உத்தமதானபுரம் வே. சாமிநாதய்யர் அவர்கள் – (இவர் இல்லை என்றால் நமக்கு தமிழ் மொழியில் உள்ள காப்பியங்கள கிடைத்திருக்காது. தமிழுக்கு இவர் செய்த பணிகள் எண்ணிலடங்காதவை, எனவே அவரை தமிழ் தாத்தா என்று அழைக்கப் படுகிறார்).தமிழ் தாத்தா அவர்கள் கலைமகள் மாத பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவருக்கு அத்யந்த சிஷ்யராக வந்தவர் தான் வாகீச கலாநிதி அவர்கள். மேலும் கலைமகள் மாத இதழின் ஆசிரியராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்தார். கலைமகளில் கதையோ கட்டுரையோ வந்தால் அதற்கு தனி மதிப்பும் மரியாதையும் புகழும் இன்றளவும் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புகழையும் முருகனின் பெருமையையும் தெள்ளத் தெளிவான நீரோடையை போல் சொல்லி கொடுப்பதில் இவருக்கு நிகரானவர் இவரே ஆவார். கந்தரலங்காரத்தில் வரும் “சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில்…… என்ற பாடலுக்கு இவர் சொன்ன வியாக்யானம் இன்றளவும் கேட்க கேட்க புதுமையாக இருக்கும். அகில இந்திய வானொலியின் ஆர்க்கைவ்ஸில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
குருஜி ராகவன் அவர்களும் வாகீச கலாநிதியும் –
“முருகா சரணம், குருஜியைப் பற்றி பல பேருக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கலாம் – என் தந்தை வாகீச கலாநிதி கி வா ஜெகன்னாதன் அவர்களை தமிழ் உலகம் அறியாமல் இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர் குருஜியின் பஜனை எங்கு நடந்தாலும் தன் வேலைகளை தள்ளி வைத்து விட்டு அங்கு சென்று எதிரில் உட்கார்ந்து கொண்டு தவம் செய்வதைப் பார்த்து இருக்கிறேன். கண்ணை மூடி தாரை தாரையாக வழியும் நீரைக் கூட துடைத்து கொள்ளாது ஓம் என்று தொடங்கி பஜனை முடியும் வரை கண்ணைத் திறவாமல் பாடலில் கருத்தை வைத்து உட்கார்ந்து கொள்வதைக்கண்டு வியந்திருக்கிறேன். அது ஒருவிதமான இனம்புரியாத இன்பத்தவம்” – குருஜி நினைவு பூங்கொத்திலிருந்து திருமதி உமா பாலசுப்பிரமணியன்.
1982 என்று நினைக்கிறேன், தில்லி மலை மந்திரில் ஸ்ரீ மகாசந்நிதானம் சிருங்கேரி ஜகத்குரு அபிநவவித்யா தீர்த்தர் மற்றும் ஜகத்குரு பாரதி தீர்த்தர் இருவருக்கும் வரவேற்பு அளிப்பதற்காக ஏற்பாடு, டாக்டர் பல்ராம் ஜாக்கர், (முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர், சம்ஸ்கிருத மொழியில் புலமை பெற்றவர் ) தலைமையில் நடைபெற்ற சமயம். மகாசந்நிதானம் இருவரும் அங்கு வந்த பிறகு வரவேற்பு அளிக்கும் முன்னர் ஜகத்குரு இருவரும் மலைமேல் இருக்கும் சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்ய சென்றனர், அப்போது நானும் கூடவே செல்லும் சமயத்தில் சந்தானம் என்கிற ஒரு வாலண்டியர் என்னை அவர்களுடன் செல்லக் கூடாது என்று தடுக்க, ஜகத்குரு அபிநவவித்யாதீர்த்த சுவாமிகள் என்னைப் பார்த்து நீயும் வா என்று சொல்ல அவர்கள் கூடவே செல்லும் பாக்கியமும், மறுநாள் வித்வத் சபையில் இரண்டு ஜகத்குரு வும், அவர்கள் தலைமையில் வாகீச கலாநிதி, புலவர் கீரன், குருஜி ராகவன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது, எல்லோரையும் ஒரே மேடையில் காணும் பாக்கியமும் கிட்டியது.
“பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்”
தமிழ் மொழியில் பெரிவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களை எல்லாம் பிரமிக்க வைக்கிறது.
சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் “யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.
அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.
அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில், “முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன் படுத்துகிறோமே….. அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்… நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்….. ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்… காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!
– K. G. ராமலிங்கம்




