spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்போகியில் இந்திரனுக்கு நன்றி சொல்வோம்!

போகியில் இந்திரனுக்கு நன்றி சொல்வோம்!

- Advertisement -
indravizha

கட்டுரை: பத்மன்

பனி விலகத் தொடங்கி, இதமான வெம்மையும் ஒளியும் அதிகரிக்கும், சூரியனின் வடதிசைப் பயணம் மகர மாதம் எனப்படும் தை மாதத்தின் முதல் நாளில் தொடங்குகிறது. இதனைப் பொங்கல் திருநாள் என்று தமிழர்கள் கொண்டாடுகின்ற அதேவேளையில் மகர சங்கராந்திப் பண்டிகை என்ற பெயரில் பாரத நாடு முழுவதிலுமாகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் இது அறுவடைத் திருநாள் என்பதால், தானிய உற்பத்தி வளமும் வருமானமும் அதிகரிப்பதன் வெளிப்பாடாக மகிழ்ச்சி பொங்கும் என்பதால் இது பொங்கல் என்று பெயர் பெற்றது.

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்று திருவள்ளுவப் பெருமானும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியாரும் கூறியதற்கொப்ப, உழவர்களையும் உழவுத்தொழிலுக்கு உதவிகரமாய் இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் செயற்கைக் கருவிகளையும் போற்றும் திருநாளே இந்தப் பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகை நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இதன் மையத் திருநாள், இரண்டாம் நாளான பொங்கல் விழா. அன்றைய தினம். சூரியனுக்கு நன்றி கூறும் சூரியப் பொங்கல். மூன்றாம் நாள் உழவுக்குத் துணை நிற்கும் காளை மாட்டுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல். நாலாம் நாள், உழவுத் தொழிலை மேற்கொண்டு நமக்கு உணவளிக்கு உயர்ந்த மனிதர்களான உழவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை மதித்துக் கவனிக்கும் காணும் பொங்கல்.

இந்தப் பண்டிகையின் தொடக்க நாள், மார்கழி மாதத்தின் கடைசி நாள் ஆகும். அன்றைய தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை, போகி என்று பெயர் பெற்றுள்ளது. இதன் பொருள் என்னவென்று கேட்டால், “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற இலக்கணத்துக்கு ஒப்ப, பழையவற்றைக் கழித்துப் போக்கும் பண்டிகை, ஆகையால் போகி என்று சிலர் பொருள் உரைக்கின்றனர். ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, வீட்டில் உள்ள பழைய பொருட்களைக் கழித்து, சுத்தம் செய்து, சுவர்களுக்கு வெள்ளையடித்தலும், வண்ணம் தீட்டுதலும் நடைபெறும். அந்த வகையில் போகிக்குக் கூறப்படும் இந்தப் பொருள் ஓரளவு ஏற்புடையது என்ற போதிலும் அது முழுமையான பொருள் அல்ல.

போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதன் மூல நோக்கம், உழவுக்கு இன்றியமையாத மழையைப் பொழியும் இந்திரனுக்கு நன்றி சொல்வதே. இந்திரனின் பெயர்களில் ஒன்றே போகி. இன்பங்களை நன்கு நுகர்பவன், அனுபவிப்பவன் என்பதால் இந்திரன் போகி என்று பெயர் பெற்றான். அந்தப் போகியின் அருளால் விழைவதால் விளைச்சலுக்கு போகம் என்று பெயர் வந்தது. அனுபவித்தலுக்கு அனுபோகம் என்றும், காம நுகர்வுக்கு சம்போகம் என்றும் பெயர் வந்தது. மேலும் கூறப்போனால் நமது நுகர்வுக்குத் துணை நிற்கும் கண், காது, மூக்கு, நாக்கு உள்ளிட்ட உடலுறுப்புகள், உள்ளுறுப்பான மனமும்கூட இந்திரனோடு தொடர்புடைய “இந்திரியம்” என்ற பொதுப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

நமது நுகர்வுக்கான விளைச்சலை, மழை பொழிவதன் மூலம் தருகின்ற தெய்வமான இந்திரனுக்கு முதலில் நன்றி கூறித் தொடங்குவதே போகிப் பண்டிகை. தமிழர்களின் ஐந்திணைகளில் வயலும் வயல்சார்ந்த இடமுமான மருதத் திணைக்கு உரிய தெய்வம் இந்திரன். அவனை வணங்கித் தொழாமல் எப்படி அறுவடைத் திருநாளைக் கொண்டாட முடியும்? ஆகையால் அவனுக்கு முதல் மரியாதை செய்வதே போகிப் பண்டிகை. ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இந்திரனுக்குக் கோவில்கள் இருந்தன. அவற்றுக்கு இந்திரக் கோட்டம் என்று பெயர். ஆண்டுதோறும் இந்திர விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரத்தின் இந்திர விழவு ஊரெடுத்த காதை ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (எண் 241) “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வஜ்ஜிராயுதத்தை ஏந்திய வலிமையான கரங்களைக் கொண்ட நெடியோனாகிய இந்திரன் கோவில் என்று இதற்குப் பொருள். இதேபோல் எட்டுத்தொகையைச் சேர்ந்த ஐங்குறுநூறு நூலின் 62-ஆவது பாடல், “இந்திர விழவில் பூவின் அன்ன” என்ற வரிகளுடன் தொடங்குகிறது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலின் ஐந்தாம் பாடலில், “வானத்து வளம் கெழு செல்வன்” என்றும் “புரந்தரன்” என்றும் இந்திரனைப் புலவர் இளவெயினனார் போற்றுகிறார். இதேபாடலில் “அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன்” என்றும் இந்திரனைப் புகழ்கிறார்.

இத்தனைச் சிறப்பு வாய்ந்த இந்திரன், சாபங்களையும் பெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றனவே என்ற கேள்வி எழலாம். வரம்பை மீறி, அறத்தை மீறி நுகர்வுக்கு ஆசைப்பட்டால் மிக உயர்ந்த இந்திரனே ஆனாலும் கெடுதி வந்து சேரும் என்று எச்சரிக்கவே நமது முன்னோர்கள் அதுபோன்ற புராணக் கதைகளைப் புனைந்துள்ளனர். ஆகையால் போகிப் பண்டிகைத் திருநாளான இன்று, இதனையும் உள்நிறுத்தி, அறத்தோடு இன்பங்களை நுகர்ந்து அமர வாழ்வை இங்கேயே அனுபவிப்போம் என்று உறுதி பூணுவோம்! அதன் அடிப்படையில், நமது முன்னோர்கள் உருவகப்படுத்திய, விளைச்சலுக்கும் போகத்துக்கும் தெய்வமான இந்திரனை வணங்குவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe