இந்திய குடியுரிமைச் சட்டம் சிஏஏ., வினால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று கூறப்படும் பொய்களை மறுத்து, அது யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜமாத் தலைவர் ரஷ்வி.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிப்பது இல்லை என்றும், இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் சிஏஏ சட்டத்தை வரவேற்க வேண்டும் எனவும் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷகாபுதீன் ரஷ்வி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த சட்டம் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. அதனால் இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படவில்லை.
தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) உடனடியாக அமலுக்கு வருவதாக மார்ச் 11ல் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நேரம் என்பதால், இப்போதும் பல அரசியல் கட்சிகள் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷகாபுதீன் ரஷ்வி, சிஏஏ சட்டத்தை வரவேற்றுப் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியபோது, மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ சட்டத்தை வரவேற்கிறேன். இந்தச் சட்டத்தை எப்போதோ அமல்படுத்தி இருக்க வேண்டும். சிஏஏ சட்டம் தொடர்பாக முஸ்லிம்களிடையே நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். நம் நாட்டில் முஸ்லிம்களைத் தூண்டி விடுகிறார்கள். இச்சட்டம் குடியுரிமை வழங்குவதே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிப்பது இல்லை.
இதற்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த மதத்தால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாதோருக்கு இதுபோன்ற சட்டம் இருந்ததில்லை. இந்தச் சட்டத்தால் கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; எந்த முஸ்லிமின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. தவறான புரிதல் காரணமாக கடந்த காலங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. சில அரசியல்வாதிகள், முஸ்லிம்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தினர். இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் சிஏஏ சட்டத்தை வரவேற்க வேண்டும்… என்றார்.
உண்மையில், நமது அண்டை நாடுகளில் மதவெறியை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தங்கள் தாய்நாட்டில் பாதுகாப்பாக புகலிடம் பெற இந்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைதான் இந்த CAA. இது இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தினரையோ சமூகத்தினரையோ பாதிக்காது. குறிப்பாக, இந்திய முஸ்லீம்கள் CAA பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.
மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு ஒரு கண்ணியமான பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதே இந்த சட்டத்தின் நோக்கம்.
மதநம்பிக்கை காரணமாக ஒடுக்குமுறையை சந்திப்பதால் பல காலங்களாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்து மக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்கின்றனர். இந்து மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்ட நபர்களுக்கு குடியுரிமை வழங்கவே CAA முயல்கிறது. இதன்மூலம், இந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கிறது.
பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை, கட்டாய மதமாற்றங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாரபட்சம் போன்ற ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். CAAவின் மூலம் அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்று சுதந்திரமாக வாழ முடியும்.
இது அவர்களின் மத மற்றும் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்துகிறது, அதே சமயம் விளிம்புநிலைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைக்கு வந்தபோது இருந்த எந்த உரிமையும் பறிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். CAA எந்தவொரு இந்திய குடிமகனின் சட்ட, ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற உரிமைகளையும் மட்டுப்படுத்தவில்லை.
வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெறுவதை நிர்வகிக்கும் தற்போதைய சட்ட கட்டமைப்பை CAA மாற்றியமைக்கவில்லை. உலக புவிசார் அரசியல், அண்டை நாடுகளின் மக்கள்தொகை அமைப்பு, அவர்களின் உள்சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழும் நிலை, அரசுகளின் செயல்பாடு உட்பட பல காரணிகளைக் கருத்தில் கொள்ளும்போது, நமது அண்டை நாடுகளில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தஞ்சம் அடையக்கூடிய ஒரே நாடு இந்தியா மட்டுமே.
CAA ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு புகலிடம் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் உட்பட இந்தியாவின் அனைத்து சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எந்த சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் மீறப்படவில்லை.
நமது அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களுகளின் உரிமைகளைக் காக்கும்வரை, வேறு எந்த சட்டமும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாது.