
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 53
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
- குண்டதாரோபாஸ்தி ந்யாய:
குண்டதாரா- ஒரு யக்ஷனின் பெயர் (குட்டிச் சாத்தான்)
உபாஸ்தி – உபாசனை
பூவுலகில் மனிதர்கள் இருப்பது போல, பிரமமண்டமான விஸ்வத்தில் பல உலகங்களில் யட்சர், கின்னரர், கிம்புருஷர், வித்தியாதரர் போன்ற திவ்ய மனிதர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் மனித இனத்தை விட மேம்பட்ட சக்திகளை பெற்றிருப்பார்கள்.
இவர்களுள் குண்டதாரன், இந்தீவராக்ஷன், கண்டாகர்ணன், மணி பத்ரகன், ஜ்ரும்பகன் போன்ற யட்சர்கள் பிரசித்தமானவர்கள். இவர்கள் எளிதில் மகிழ்ச்சியடைவார்கள். ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிஞ்ஜாசி ஆகியோர் குருமார்களின் மூலம் யக்ஷ மந்திரத்தை பெறுவார்கள். தவத்தின் பலனாலும், தாந்திரிக விதானங்கள் மூலமும் இந்த யக்ஷ தேவதைகளை சந்தோஷப்படுத்தி, வசம் செய்து கொண்டு, தம் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்வதோடு பரோபகாரமும் செய்துவரும் சமூகநல விரும்பிகள் நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள்.
இந்த நியாயத்தில் குண்டதாரன் என்ற யட்சனின் சிறப்பு கூறப்படுகிறது. ஒரு மனிதன் குரு உபதேசத்தின் மூலம் பெற்ற யக்ஷ மந்திரத்தை சாஸ்த்திரத்தின்படி ஜபம் செய்து குண்டதாரன் என்ற யட்சனை மகிழ்வுரச் செய்து கொண்டான் என்றால், அந்த யக்ஷன் தன் எல்லைக்குட்பட்டு சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தருவான். தன் பக்தன் கேட்ட பெரிய கோரிக்கைகளைத் தன்னை விட பெரிய தேவதைகளின் உதவியோடு நிறைவேற்றுவான். மொத்ததத்தில் குண்டதாரன் என்ற யக்ஷன் நம் வேலைகைளை முழுவதுமாக வெற்றி பெறச் செய்வான். இந்த நியாயம் கூறும் செய்தி இதுவே.
நம் நண்பர்களுள் குண்டதாரன் போன்ற பலர் இருப்பதை நாம் காண முடியும். இது பலருக்கும் அனுபவமே. பிறருக்கு உபகாரம் செய்வதற்கும், தன் உயிர் நண்பர்களுக்கு உதவுவதற்கும், திறமையான நண்பரைக் கொண்டோ, பெரிய அதிகாரிகளின் உதவி பெற்றோ, வேலையை முடித்துக் கொடுப்பார்கள். இதுவே ‘குண்டதாரோபாஸ்தி’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.
பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனம் கொண்டிருக்க வேண்டுமென்றும், தன்னிடம் உதவி வேண்டியவர்களையும், தன் மீது கௌரவ மரியாதை கொண்டவர்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், தன்னால் இயலாவிட்டால் தன் நண்பர்களின் மூலமோ, சமர்த்தர்களின் மூலமோ அந்த வேலைகளைச் செய்து தரும்படியும் ‘குண்டதார நியாயம்’ நமக்கு உபதேசிக்கிறது.
‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ “Where there is a will, there is a way” போன்ற கூற்றுகள் இதையே தெரிவிக்கின்றன. உதவி செய்வதாக வாக்களித்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உபதேசத்தையும் இந்த நியாயம் தெரிவிக்கிறது. நல்ல மனிதர்களின் இயல்பை பற்றிக் கூறுகையில் பர்த்ருஹரி, பிறருக்கு உதவும் குணத்தை வர்ணிக்கிறார். கேட்டாலும் கேட்காவிட்டாலும் பரோபகாரத்தில் ஈடுபடவேண்டும் என்பது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இயற்கை போன்றவை கற்பிக்கும் பாடம்.
மேகம், கோடிக்கணக்கான மக்கள் அனைவருக்கும் வேறுபாடின்றி தண்ணீரைப் பொழிகிறது. சமுத்திரம் சூரியனின் உதவியோடு உலகிற்கு நீரை அளித்தாலும், மேகம் நீரளிக்கும் கொடையாளியாகப் பெயர் 8பெறுகிறான் என்று சமத்காரமாக சுபாஷிகம் பாடினார் கவி. ‘குண்டதார’ நியாயத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.
ரகுவம்சத்தில் ஒரு காட்சி. ‘விஸ்வஜித்’ என்ற யாகம் செய்த ரகுமஹாராஜா தன்னிடமிருந்த செல்வமனைத்தையும் தானம் செய்துவிட்டார். செல்வமற்று இருந்த ரகு மகாராஜாவிடம் வந்த ‘பரதந்து’ ரிஷியின் சீடரான ‘கௌத்ச’ ரிஷி செல்வத்தை யாசித்தார். தன்னை வரவேற்று, மண் பாத்திரத்தால் அர்க்கியம், பாத்தியம் அளித்த ரகுமஹாராஜாவின் பொருளதார நிலையைக் கவனித்த கௌத்ச ரிஷி, ரகு மஹாரஜாவால் தன்னுடைய கோரிக்கையைத் தீர்க்க முடியாதென்று எண்ணி, வேறு கொடையாளியிடம் செல்ல நினைத்தார். ஆனால், ரகுமஹாராஜா, கௌத்சரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக குபேரன் மீது போர் தொடுக்க முடிவு செய்தார். ரதத்தில் அஸ்திரங்களையும் சஸ்திரங்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது ஆச்சர்யமாக அரசாங்கக் கருவூலத்தில் பொன் மழை பொழிந்தது.
‘பரதந்த’ருக்குக் கொடுக்க வேண்டிய குரு தட்சணை ‘கௌத்ச’ருக்குக் கிடைத்தது. “பூமியானது விருப்பமான திரவியங்களை அளிப்பது அதன் இயல்பு. ஆனால் ரகு மகாராஜா, உனக்கு ஆகாயம் கூட விரும்பியவற்றைப் பொழிந்தது” என்று கௌத்சர் ரகுமஹாராஜாவைப் புகழ்ந்து ஆசீர்வதித்தார். தன்னைச் சரணடைந்தவருக்கு எவ்விதத்திலாவது உதவ எண்ணிய ரகுமஹாராஜா இந்த ‘குண்டதாரோபாஸ்தி’ நியாயத்திற்கு உதாரணம்.
புராண காலத்தில் அற்புதமான மருத்துவ முறைகள் இருந்தன. தொடுதல் மூலமும், எண்ண அலைகள் மூலமும் நோயைக் குணப்படுத்தும் செயல்முறை, மந்திரங்களின் மூலம் தேள், பாம்பு கடித்த விஷத்தை நீங்கும் செயல்முறை போன்றவை பரோபகார சிகிச்சை முறைகள். சித்தர்களும் முனிவர்களும் தம்முடைய தவ சக்தியால் சிகிச்சை செய்த பரோபகார செயல்முறைகள் பல இருந்தன. உலக அளவில் புகழ்பெற்ற ‘ரேக்கி’ சிகிச்சை முறையும் இதற்கு எடுத்துக்காட்டு.
தன்னிடம் பிரார்த்தனை செய்த பக்தனுக்கு வரமளிக்கும் சக்தி தனக்குப் போதாததால் ‘குண்டதாரன்’ என்ற யக்ஷன் தன்னை விட சக்தி அதிகம் கொண்ட தேவதைகளைக் கொண்டு வரமளிக்கச் செய்வது இந்த நியாயத்தின் சிறுப்பு. நல்ல மனிதர்கள் தமக்கு சக்தி இல்லாவிட்டாலும் பிறரைக் கேட்டாவது தேவையானவருக்கு உதவி புரிவர்.
தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர், விபத்துகள் போன்றவை நேரும் போது பாதிக்கப்பட்டவருக்கு உதவும் சேவாபாரதி, ராமகிருஷ்ண மிஷின் போன்ற அமைப்புகள் பல உள்ளன. அவர்கள் செய்யும் சுயநலமற்ற சேவைகளை உற்சாகப்படுத்தி வள்ளல்கள் பொருளாதார உதவி புரிகிறார்கள். அந்த செல்வத்தைப் பெற்று அந்த அமைப்புகள் சமூக சேவை செய்து வருகின்றன. இயல்பாகவே உலக நன்மைக்காக உதவும் அமைப்புகளும், வள்ளல்களும் குபேரனைப் போன்றவர்கள்.
“நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கொடுப்பவர்களைக் காட்டு” என்றொரு முதுமொழி உள்ளது. “பரோபகரமே உயர்ந்த நிலை. சுயநலம் அல்ல. பிறருக்காகவே வாழ வேண்டும்” போன்ற சிறந்த வாக்கியங்களுக்கு ஊக்கம் இந்த குண்டதாரனின் கதை.





