‘ஹிந்து ராஷ்ட்ரா‘ தினசரிக்கும் பம்பாய் மாகாண காங்கிரஸ் அரசாங்கம் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தது. இந்த பத்திரிகையும் நன்னடத்தையை உறுதி செய்யும் பொருட்டு 5000 ரூபாய் காப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ தினசரி,காப்புத் தொகையை கட்ட முடியாமல் திணறும் என்று காங்கிரஸ் அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால், உரிய நேரத்தில் அந்த பணத்தை கோட்ஸேயும், ஆப்தேயும் கட்டி விட்டனர்.
நாடு முழுவதும் மதக்கலவரங்கள் பரவிக் கொண்டிருந்த நிலையில், ஹிந்துக்களில் வசதிப் படைத்தவர்கள் ஹிந்து மகா சபா நிலைப்பாட்டை ஆதரித்தனர். பெருமளவில் நிதி உதவி செய்தனர்.
பலர் அரசுக்கு பயந்து மறைமுகமாக நிதி அளித்தனர். 1946 ஆம் வருடம் பிற்பகுதியில், ’ ஹிந்து ராஷ்ட்ரா ‘ தினசரிக்கோ கோட்ஸே, ஆப்தேக்கோ நிதி பற்றாக்குறை ஏற்படவில்லை.
தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வாங்கி சேகரித்தார்கள். அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த நிலையிலும்,அதைப் பற்றிச் சற்றும் கவலைப் படாது, உண்மை செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தனர்.
‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ தினசரியின் கடைசி வெளியீடு 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ந் தேதி வந்தது. காந்தி கொல்லப்பட்ட செய்தியை தினசரி வெளியிட்டது !!
மதக் கலவரங்களைப் பற்றிய செய்திகளை பத்திரிகைகளிலும், ரேடியோவிலும், அரசு இருட்டடிப்புச் செய்தது, பதற்றத்தை தணிக்க எந்த விதத்திலும் உதவவில்லை.
பம்பாய் மாகாண காங்கிரஸ் அரசாங்கம் மதக்கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டு வர செய்வதறியாது திணறியது.
1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ’ நேரடி நடவடிக்கை ‘ யை ஜின்னா அறிவித்தார். ஆங்கிலத்தில் இது ‘GREAT KILLINGS OF CALCUTTA ‘ என அறியப்பட்டது.
ஜின்னாவின் கூற்றுப்படி, ‘ நேரடி நடவடிக்கை ‘ என்பது, அரசியல் அமைப்புக்குத்தக்க நடவடிக்கைகளை முற்றிலும் புறக்கணிப்பது, ஜனநாயக நெறிமுறைகளை காற்றிலே பறக்க விடுவது.
நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய FRANK MORAES கூறுகிறார் : ’’ ஜின்னாவின் ‘ நேரடி நடவடிக்கை ‘ அறிவிப்புக்கு பின் ஒரு வஞ்சனையான நோக்கம் இருந்தது… ரயிலிலே பயணிக்கும் ஹிந்துக்களை கொத்து கொத்தாகக் கொன்று குவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது…
நாடெங்கும் வன்முறை வெறியாட்டத்திலும்,இரத்தக் களறியிலும் ஈடுபட்டு ஹிந்துக்களை நிலைக்குலையச் செய்ய வேண்டும்…
இந்த வன்முறை வெறியாட்டம் 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதியையும் கடந்தும் நடந்தது“’
ஜின்னா எதிர்பார்த்ததை விடவும் மோசமாகவே பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறின.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
எழுத்து: யா.சு.கண்ணன்



