தாதா மஹராஜவுடனான சந்திப்பின் போது,ஆப்தேயோடு உடனிருந்த கார்கரே,அஹமத் நகருக்கு திரும்பிச் செல்லாமல் பூனாவிலேயே தங்கினார். ஸ்டென் கன் வாங்க திகம்பர் பாட்கேயை சந்திக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் கார்கரே.
இதுகாறும் திகம்பர் பாட்கேயை கண்டாலே ஏனோ,நாதுராமிற்கும் ஆப்தேயுக்கும் பிடிக்கவே இல்லை. திகம்பர் பாட்கே….
குள்ளமான உருவம்,ஆனால் கட்டுமஸ்தான உடல்வாகு.சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் அடிப்பட்டு,இரு கண்களில் ஒன்று மற்றொன்றை விட சிறியதாகக் காட்சி தந்தது.
எவ்வளவு கூட்டத்திற்கிடையேயும் அவருடைய குள்ளமானத் தோற்றமும், ஒன்றுக்கொன்று பொருத்தமற்று அமைந்திருந்த கண்களும் அவரை எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும்.
பெரிய வாய் சவுடால் பேர்வழி. பேசத் தொடங்கினால் அவரை நிறுத்தவே முடியாது,பேசிக் கொண்டே இருப்பார்.
அவரிடம் கத்தி,கபடாக்கள் வாங்க வருவோர் அய்யா சாமி விட்டாலே போதும் என்று வாங்கிக் கொண்டு ஓடிவிடுவர். தான் மாறுவேடம் போட்டால்,தன்னை யாருமே கண்டுபிடிக்க முடியாது எனும் பீற்றல் வேறு.
வருவோர் போவோரிடமெல்லாம் ஒரு ஆல்பத்தை தூக்கிக் காட்டுவார். அதில்,ஒரு முஸ்லீம் கசாப்புக்கடைக்காரன் போல்,பூஜை செய்யும் பிராமணர் போல்,ஒரு சீக்கிய விவசாயிப் போல், ஒரு சிறைக் கைதிப்போல்… பல்வேறு வேடங்களில் புகைப்படங்கள்….
‘’ இது யார் தெரிகிறதா..நான் தான் ‘’ என்று தன் மாறுவேட படங்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்வார்.
ஒரு முறை திக்ஷித் மஹாராஜாவை காண வந்திருந்தார்.அப்போது ஒரு இசைக்கலைஞன் போல் வேடமிட்டுக் கொண்டு….. அவருடன் ஒரு வேலையாள்…
ஒரு இசைக்குழுவிற்குரிய வாத்தியங்களான,இரண்டு ட்ரம்கள், தபலா,டக்கா…. சுமந்து வர.. திக்ஷித் மஹராஜ் முன் ட்ரம்களை திறந்து,அவற்றி ருந்து குத்து வாள்களை ( DAGGERS ) தரையில் கொட்டினார் திகம்பர் பாட்கே.
அவருடன் உடன் வந்த வேலையாள் பெயர் சங்கர் கிஷ்டய்யா…
பின்னாளில் காந்தி கொலை வழக்கின் ACCUSED NO.5 !! ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,பின்னர் அப்பீலில் விடுதலை செய்யப்பட்டவர்.
தன்னுடைய வேலையாள் சங்கர் கிஷ்டய்யாவை திகம்பர் பாட்கே நடத்தி வந்த விதத்தை விவரித்தாலே அவர் எவ்வளவு கேவலமான மனித ஜென்மம் என்பது விளங்கும். சங்கர் கிஷ்டய்யா சோலாப்பூரில் பிறந்தவர். தாய் மொழி தெலுங்கு.அந்த மொழியைத் தவிர வேறு மொழியில் பேசத் தெரியாது.படிப்பறிவில்லை.
1945 ஆம் வருடம் கிஷ்டய்யா மரத் தச்சு தொழில் கற்றுக் கொண்டு தன் அம்மாவுடன் சோலாப்பூரில் வசித்து வந்தார். ஒரு விற்பனை விஷயமாக அந்த ஊருக்கு வந்த திகம்பர் பாட்கே எதேச்சையாக சங்கர் கிஷ்டய்யாவை பார்த்தார்.
ஒரு சப்ளையரிடமிருந்து அடிமாட்டு விலையில் குத்து வாள்கள் வாங்கியிருந்த திகம்பர் பாட்கேவிற்கு, அவற்றிற்கு பிடிகள் போட ஒரு ஆள் தேவைப்பட்டார்.
அந்த வேலையை,சங்கர் கிஷ்டய்யாவிற்கு தருவதாகக் கூறினார் திகம்பர் பாட்கே. மாதம் 20 ரூபாய் சம்பளம்,சாப்பாடு,துணிமணிகள்…..
சங்கர் கிஷ்டய்யாவும் திகம்பர் பாட்கேயை நம்பி அவருடன் புறப்பட்டுச் சென்றார்.
அன்று பிடித்தது அவருக்குச் சனி !! பூனாவில் அவருக்கு உள்ளூர் மொழியான மராத்தி சுத்தமாகத் புரியவில்லை.தன்னுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் தன் எஜமானனான திகம்பர் பாட்கேயையே சார்ந்து இருந்தார்.
உடைந்த தெலுங்கு,ஹிந்தி கலந்துப் பேசி எப்படியோ திகம்பர் பாட்கே சங்கர் கிஷ்டய்யாவிடம் வேலை வாங்கி விடுவார். பாட்கே பின்னாளில் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தப்படி,சங்கர் கிஷ்டய்யாவின் பணிகள், குத்து வாள்களுக்கு பிடிகள் போடுவது,பாட்கே பயணம் செய்யும் சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டிச் செல்வது, அவருடைய கடை ஆயுதங்களை தேவைப்படும் நேரங்களில் சுமப்பது,ஒரு டெலிவரி பையனைப் போல செயல்படுவது,தன்னுடைய வீட்டு வேலைக்காரனாய் வீட்டு வேலைகள் செய்வது….
வீட்டு வேலைகளில் கீழ்கண்டவை அடக்கம்….
பாட்கேயின் ஆடைகளை துவைப்பது,பாட்கேவுக்கு உடல் மசாஜ் செய்து விடுவது,வீதி குழாய்களிலிருந்து தண்ணீர் பிடித்து வருவது தரையை கூட்டி,பெருக்கி துடைப்பது,சமையலில் உதவுவது,கடை சம்பந்தமான காரியங்கள்…
பாட்கேயின் வேலைகள் தீர்ந்து விட்டால் … அருகாமையில் வசித்து வந்த திகம்பர் பாட்கேயின் சகோதரி வீட்டிற்குச் சென்று அவர் இடும் பணிகளை செய்வது….
சங்கர் கிஷ்டய்யாவிற்கு பேசியபடி,திகம்பர் பாட்கே 20 ரூபாய் சம்பளம் ஒழுங்காக கொடுத்ததே இல்லை. அந்தக் காலத்திலேயே அந்த 20 ரூபாய் என்பது மிகக் குறைவான தொகையாகும்.
வாரத்திற்கு ஒரு முறை ஒன்றிரண்டு ரூபாய்களை மட்டுமே கொடுப்பார்.சங்கர் வாங்க மறுத்தால் திகம்பர் பாட்கேயும் அவருடைய சகோதரியும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். ஒரு முறை சங்கர் கிஷ்டய்யாவின் தாயார் பூனா வந்து மகனுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கேட்ட போது,அவரையும் வாய்க்கு வந்தபடி பேசித் துரத்தியடித்தனர் பாட்கேயும்,அவரது சகோதரியும்.
1946 ஆம் வருடம் ஜூன் மாதம் வாக்கில்,ஆறு மாதம் சம்பள பாக்கியை கேட்டு,அது கிடைக்காததால்,கிடைக்கும் எனும் நம்பிக்கையில்லாததால்,அங்கிருந்து சொந்த ஊரான சோலாப்பூருக்கு ஓடிப் போய் விட்டார் சங்கர் கிஷ்டய்யா.
தன்னிடமிருந்து 200 ரூபாயை திருடிக் கொண்டு ஓடிவிட்டதாகக் கூறி,சங்கர் கிஷ்டய்யா மீது புகார் கொடுத்து,அவரைக் கைது செய்வித்து போலீஸ் மூலம் பூனா கொண்டு வந்து, அவரை லாக்கப்பில் அடைக்கச் செய்து..
போலீசாரால் கண்டபடி அடிக்க வைத்து, திகம்பர் பாட்கேயை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது, அவர் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்,தன் வாழ்நாளை தன் எஜமானனுடன் கழிப்பது தான் தன் விதியென்று தீர்மானித்து…
திகம்பர் பாட்கேயிடம் தன்னை விடுவிக்கும்படி கெஞ்சிக் கூத்தாடினார் சங்கர் கிஷ்டய்யா…
திகம்பர் பாட்கேயும் ‘ மனமிரங்கி ‘ அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து மீண்டும் தன்னிடம் பணியில் சேர்த்துக் கொண்டார். கசாப்புக்கடைக்காரனிடம் தஞ்சம் புகுந்த ஆடு போல ஆனார் சங்கர் கிஷ்டய்யா.
திகம்பர் பாட்கே பெருந்தன்மையாக அவனுடைய மாதச் சம்பளத்தை 30 ரூபாய் ஆக்கினார். அப்போது சங்கர் கிஷ்டய்யாவிற்கு வயது 18.
’ திருட்டு வழக்கு ‘ விசாரணைக்கு வந்த போது ,திகம்பர் பாட்கே ஆஜராகாமல், பல வாய்தாக்களுக்குப் பிறகு வழக்கும் தள்ளுபடி ஆனது. அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது.
திகம்பர் பாட்கே வீட்டில் ,நிரந்தர கொத்தடிமை ஆனார் சங்கர் கிஷ்டய்யா.
( தொடரும் )




