GUN COTTON SLAB ஐ மதன்லால் பஹ்வா வெடிக்கச் செய்தவுடன்,அந்த சத்தத்தை கேட்ட மாத்திரத்தில்,
காலையில் பாட்கேயிடம் காட்டப்பட்ட பணியாளர்கள் தங்குமிடத்தில் அந்த அறையின் சிமெண்ட் ஜாலியின் வழியாக,அவர் கோபால் கோட்ஸேயின் ரிவால்வரை பயன்படுத்தி காந்தியை சுட வேண்டும் ;
இதற்கிடையே ஷங்கர் கிஷ்டய்யா,காந்தியை மிக அருகில் நெருங்கி,பாட்கேயின் .32 ரிவால்வரை பயன்படுத்தி அதிலிருந்த பாக்கி மூன்று குண்டுகளை ( ஒரு குண்டு பயிற்சியின் போது வீணானது நினைவிருக்கலாம் )காந்தியை சுட வேண்டும்.
பாட்கே ஒரு கையெறி குண்டை சிமெண்ட் ஜாலி வழியாக,ரிவால்வரின் BARREL ஐ கொண்டு வெளியே தள்ளி வெடிக்கச் செய்ய வேண்டும் ;
ரிவால்வர் வெடிக்கும் சத்தம்தான் மற்றவர்களுக்கு சிக்னல் ;உடனே மற்றவர்கள் கையெறி குண்டுகளை காந்தி இருக்கும் திசை நோக்கி வீச வேண்டும் ;
இதற்காக,பாட்கே,ஷங்கர் கிஷ்டய்யா,கார்கரே,மதன்லால் மற்றும் கோபால் கோட்ஸே ஆகியோரிடம் தலா ஒரு வெடிகுண்டு கொடுக்கப்பட்டது.
ஆப்தேயும் நாதுராமும் எல்லாம் சரியாக நடப்பதை உறுதி செய்ய சிக்னல்கள் கொடுத்த வண்ணம் இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
ஏதாவது கேள்விகள் இருக்கிறதா ?
யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
திட்டம் எல்லாவிதத்திலும் சரியாக இருப்பதாக எண்ணினார்கள்.
எதுவும் தவறாக போக வாய்ப்பில்லை.
GUN COTTON SLAB பிரச்சனையின்றி வெடித்து எதிர்பார்த்த பதற்றத்தை உருவாக்கும் ;
காந்தி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்புறமிருந்த பணியாளர்கள் அறைக்குள் நுழைந்து அறையின் ஜாலி வழியாக ,கோபால் கோட்ஸேயின் ரிவால்வரை பயன்படுத்தி பாட்கே காந்தியை சுட்டு விட முடியும் ;
காலையில் சரியாக வெடிக்கத் தவறிய பாட்கேயின் சிறிய ரிவால்வர்,காந்திக்கு மிக அருகாமையிலிருந்து சுடுவதால் உரிய வேகம் கிடைத்து சரியாக சுடும் ;
அதன் பிறகு அனைவரும் தங்கள் வசமிருந்த கையெறி குண்டுகளை திட்டமிட்டபடி காந்தி இருந்த திசை நோக்கி எறிந்து விட்டு,அந்த இடத்திலிருந்து எதுவும் நடக்காதவாறு சென்று விட முடியும்;
அனைவரும் தங்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பிச் சென்று,ஓரிரு நாட்களுக்கு,வெளியே தலைக்காட்டாமல் இருந்து விட்டு,
ரயில்களையும்,விமானங்களையும் பிடித்துக் கொண்டு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விடலாம்.
தேசத்திற்கு பெரும் துரோகம் இழைத்து விட்ட மாபாவி ஒருவரைக் கொன்று விட்ட திருப்தியில் வாழ்க்கையை தொடரலாம்.
நாடே,அவர்களை உண்மையான தேசபக்தர்களாக,பொதுநல விரும்பிகளாக,கதாநாயகர்களாக கொண்டாடும்.
இப்படியாக கற்பனையில் அந்த எழுவரும் மிதந்தனர்.
அவர்கள் கூறிய பல விஷயங்கள் ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு புரியாததைப் பற்றி ஆப்தே கவலை கொள்ளவில்லை ;
காந்தி எப்படி இருப்பார் என்பது ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு தெரியாததும் அவருக்கு பிரச்சனையில்லை.
இதையெல்லாம் விளக்கி அவருக்கு புரிய வைக்க வேண்டியது அவருடைய எஜமானரான திகம்பர் பாட்கேயின் வேலை;
திகம்பர் பாட்கே இதை ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு எப்படி விளக்கினார் ?
தான் யாரை நோக்கி சுடுகிறாரோ,அவரை நோக்கி ஷங்கர் கிஷ்டய்யா சுட வேண்டும் ; தான் யார் மீது குண்டை எறிகிறாரோ அவர் மீது ஷங்கர் கிஷ்டய்யா குண்டை எறிய வேண்டும் ;
அவ்வளவுதான்.
மேலும் விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை …
தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.
திட்டத்தில் சிறுசிறு திருத்தங்களை செய்துக் கொண்டனர்.
நேரம் நெருங்க நெருங்க அவர்களின் பதற்றம் அதிகரித்தது….
சிந்திக்கும் திறன் குறையத் தொடங்கியது.
திடீரென அனைவரும் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆப்தே அறிவித்தார்.
அவசர அவசரமாக ஒவ்வொருவருக்கும் ஒரு புது பெயர் சூட்டப்பட்டது.
நாதுராம் கோட்ஸே ‘ தேஷ்பாண்டே ‘ ஆனார் ;
ஆப்தே ‘ கர்மர்கர் ‘ ஆனார் ;
கார்கரே ‘ வ்யாஸ் ‘ ஆனார் ; பாட்கே ‘ பந்தோபந்த் ‘ ஆனார் ; சங்கர் கிஷ்டய்யா ‘ துக்காராம் ‘ ஆனார்.
கோபால் கோட்ஸேக்கும்,மதன்லால் பஹ்வாவிற்கும் என்ன பெயர் கொடுக்கப்பட்டது என்பதை அவர்கள் மட்டும் அல்ல,வேறு யாரும் கூட பின்னர் நினைவு கூர முடியவில்லை.
அந்த குழப்பமான சூழ்நிலையில்,இந்த புதிய பெயர்களை நினைவு வைத்துக் கொள்ள முடியாது என்பது கூட அவர்களுக்கு புரியாமல் போனது.
(தொடரும்)