பிறரிடம் பகிரக்கூடாத ஒன்பது ரகசியங்கள் இவைதான். அதுவும், அனைவரிடத்திலும் வெளிப்படையாக தெரிவிக்க கூடாத ரகசியங்கள் இவை. இவற்றை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாண்டாலே, உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பலவிதமான கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
आयुर्वित्तं गृहच्छिद्रं मन्त्रो मैथुनमौषधम् ।
तपो दानावमानौ च नव गौप्यानि सर्वदा II
ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் மந்த்ரோ மைதுநமௌஷதம் |
தபோ தாநாவமாநௌ ச நவ கௌப்யாநி ஸர்வதா||
இரண்டு விதங்களில் இந்த நீதியை போதிக்கும் ஹிதோபதேச சுலோகம் உள்ளது. இன்னொன்று…
ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமௌஷதம்|
தபோ தானாவமானே ச நவ கோப்யானி காரயேத்||
ஆயுள், பணம், வீட்டிலுள்ள தர்மம், மந்திரம், மைதுனம் (தாம்பத்ய வாழ்க்கை), ஒளஷதம்(மருந்து), தபஸ், தானம், அவமானம் இவற்றை வெளியிடக் கூடாது.
நாம் பெரும்பாலும், நம் தொடர்பான விஷயங்களை அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு அவற்றைப் பற்றி பேசுவதை விரும்புவோம். பிறர் அவற்றை ஆறுதலாகக் கேட்பது போன்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம்.
இப்படி தண்டோரா போடுவது, நம் விஷயங்களை நாமே தம்பட்டம் அடிப்பது இவை எல்லாம் பலருக்கும் உடன்பிறந்த குணமாகவே உள்ளது. முன்பெல்லாம் அடுத்தவர்களை அழைத்து இவ்வாறு பேசுவார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்… சமூகத் தளங்கள்.
பேஸ்புக், வாட்ஸ் அப் குரூப், டிவிட்டர் இவற்றில் ஒவ்வொரு நாளும் நம் ரகசியங்களைச் சொல்லி அவற்றை நாலு பேர் விவாதிக்காவிட்டாலோ, விசாரிக்காவிட்டாலோ பலருக்கு மன அழுத்தம் வந்துவிடுகிறது. குறைந்த பட்சம் யாராவது தமது கருத்துக்கு லைக் போட வில்லை என்றால் கூட அதனை ஏதோ விரோதிகளின் செயல் போல் பார்ப்பதும் இன்றைய எண்ணமாகி விட்டது.
ஆனால், இவ்வாறு செய்வது தவறு என்கிறது நீதி சாஸ்திரம். குறிப்பாக, மேற்கண்ட இந்த ஒன்பது விஷயங்களை மட்டுமாவது நாம் கண்டிப்பாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று பட்டியலிடுகிறது நீதி சாஸ்திரம்.
அந்த ஒன்பதையும் இப்போதாவது மனத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அவை என்னவென்றால்…
உங்களின் வயது,
உங்களிடம் இருக்கும் செல்வம் (நகை நட்டு பணம் சொத்து என எவை வேண்டுமானாலும் இருக்கலாம்),
குடும்பத்தில் ஏற்படும் கலகம் அல்லது சண்டை சச்சரவுகள்,
நாம் உபதேசமாக பெற்ற மந்திரம்,
நாம் உடல் நோய்க்கு பயன்படுத்தும் மருந்து, தாம்பத்தியம் (கணவன்- மனைவி சேர்க்கை), தானம் (செய்கின்ற தானங்கள்),
மானம்,
நாம் பட்ட அவமானங்கள் என இந்த ஒன்பதையும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்க வேண்டும்.
நமது இந்த விஷயங்களை வெளியே சொல்லிக்கொண்டு திரிவதால் பிரச்னைகள் கூடுமே தவிர குறையாது. நாம் வாழ்வில் அமைதியாகக் காலம் கழிக்க வேண்டுமென்றால், இவற்றை அடுத்தவர்களிடம் சொல்லக் கூடாது என்கிறது நீதி சாஸ்திரம்.