பலாப்பழ இலை அடை:
தேவையான பொருட்கள்:
பலாப்பழம்( கொட்டை நீக்கியது ) -10;
வெல்லம் -1/2 கிலோ;
தேங்காய் -2;
அரிசி -ஒன்றரை ஆழாக்கு;
ஏலப்பொடி – 1ஸ்பூன்;
நெய் -2 கரண்டி;
குங்குமப்பூ -சிறிதளவு;
வாழை இலை -2;
உப்பு -1/2 ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை ஊற வைத்து, உலர வைத்து, மாவாக்கி, சலித்து உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து ரொட்டிமாவு பதத்திற்கு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து மண் தூசி இல்லாமல், வடிகட்டி வைக்கவும். பலாப்பழத்தை சிறுசிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைக் காய்ச்சி பாகுபதம் வரும் சமயத்தில் தேங்காய்த் துருவல், பலாப்பழ துண்டங்கள், ஏலப்பொடி, குங்குமப்பூ, ஒரு கரண்டி நெய் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியானதும் இறக்கி வைத்துக்கொள்ளவும்.
வாழை இலையை சின்ன சின்ன துண்டங்களாக நறுக்கி, அதில் நெய் தடவிக் கொள்ளவும். மாவை உருண்டைகளாக்கி, இலையில் பூரிக்கு தட்டுவதுபோல் தட்டி பூரணத்தை வைத்து மூடி, வாழை இலையோடு இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும். மணமும் அசத்தும்.
அரிசி மாவைக் கொழுக்கட்டை மாவுபோல் கிளறி சொப்பு செய்து நடுவில் பூரணத்தை வைத்தும் செய்யலாம்.