பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பாத பிரச்சனைகளுள் மிக முக்கியமானது பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்ளும் பெண்களோ ஏராளம்.
பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால், பித்தவெடிப்பு விரைவில் குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு மறையும்.
பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடம் மூழ்கவிடவும். பின்னர், பாதத்திற்கான ஸ்க்ரைப்பரைக் கொண்டு தேய்க்கவும். பின்னர், பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்ஸுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடம் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.
பொதுவாக வெயிலிலும் சரி, பனியிலும் சரி பாதத்தை பாதுகாக்க பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
பெரிய வாளியில் வெந்நீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள். அதில், உப்பு, எலுமிச்சைச் சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்விட்டு, 20 நிமிடம் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், ஸ்க்ரைப்பரைக் கொண்டு, பாதங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளை தேய்க்கவும்.
ஒரு தேக்கரண்டி நீர்க்காத கிளிசரின், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, 2 தேக்கரண்டி அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் வினிகர் சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் மீது இரவு படுக்கும் முன் தடவி விடவும். பின்னர், காலையில் எழுந்து கழுவி விடவும்.
பாதச் சருமம் வறண்டு காணப்பட்டால், வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் ஊற வைத்து கழுவிய பின், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யைக் காலில் தேய்த்துக் கொள்ளவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யைத் தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகள் விரைவில் மறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வரலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.