சிறியாநங்கை மூலிகை
செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும் இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள்.
ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 – 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.
இதன் தாவரப்பெயர் – ANDROGRAPHIS PANICULATA.
இதன் தாவரக் குடும்பம் – ACANTHACEAE.
முக்கிய வேதியப் பொருட்கள் : ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், ‘கால்மேகின்’ என்ற கசப்புப் பொருளும் உண்டு.
இலை மற்றும் வேர்ப் பகுதிகள் பயன் தரும் பாகங்கள்.
இது ஒரு ஆயுர்வேத மருந்து. குழந்தைகளுக்கான மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப்போக்கு போன்றவற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோய்க்கும் நல்ல மருந்து.
நீரிழிவு நோய்க்கும் சிறியா நங்கையை பயன்படுத்துகிறார்கள். நஞ்சுக் கடிக்கும் இதைப் பயன்படுத்துவார்கள். சிறியாநங்கை என்ற மூலிகை வெங்காரத்தைப் பஸ்பமாக்கும். தேகத்தில் வனப்பை உண்டாக்கும். விஷ முறிக்கும் மருந்தில் கூட்டு மருந்தாக செயல்படுகிறது.
பெரியா நங்கை என்ற ஒரு வகையும் உண்டு.
பாம்பை விரட்டும் சிறியாநங்கை என்பது புகழ்பெற்ற வாசகம். ஆம்… சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து.
ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவேம்பு என்பது தான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியா நங்கையும் ஒன்று என்றும் சொல்வதுண்டு.
பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே பெரிதும் நம்மால் பயன்படுத்தப் படுகிறது.
மிளகாய்ச்செடியின் இலையைப் போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அதன் விஷம் ஏறாது என்பது மருத்துவ உண்மை. அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும்.
பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப் பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடும் என்பார்கள்.
தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இது மட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது சிறியா நங்கை.