பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திர அறிவிப்பு வெளியான காலத்தில் இருந்தே, முஸ்லிம்களுக்கு தனிநாடு என மத ரீதியாக நாட்டைப் பிரித்த காலத்தில் இருந்தே, காஷ்மீர் மீது பாகிஸ்தான் குறிவைத்து வருகிறது. அதற்கு சீனாவும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தான் மூலமாக சீனா மேற்கொள்ளும் உத்திகள் உலக அரங்கில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. காஷ்மீர் மூலமாக அரபிக் கடல் பகுதிக்குச் செல்வதற்கான வழி உள்ளதால், வர்த்தக நோக்கிலும் காஷ்மீரைக் குறிவைத்து காய் நகர்த்துகிறது சீனா.
இதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துணை நிற்கிறது சீனா. இந்நிலையில் இரு போர்களில் நேரடியாக ராணுவத்தை அனுப்பி சூடு பட்ட பாகிஸ்தான் பின்னர், இஸ்லாம் என்ற பெயரிலும், புனிதப் போர் ஜிகாத் என்ற பெயரிலும் காஷ்மீருக்குள் பலரை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதிகளாக்கி, காஷ்மீருக்குள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த அனுப்பி வைத்து வருகிறது. அதனை இந்திய ராணுவமும் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 5 பேர் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.