கடந்த வாரம் ஆறு கோடி விவசாயிகளுக்கு பணிரெண்டாயிரம் கோடி ரூபாய் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.
12000 கோடி விவசாயிகளுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்ற இத்திட்டத்தின் மூலம் 72,000 கோடி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இது வரை பல்வேறு திட்டங்களில், பயனாளிகளுக்கு செல்ல வேண்டிய தொகையானது அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் என்று பல கட்டங்களை கடந்து இறுதியில் ரூபாய்க்கு 15 பைசா என்ற சராசரியில் தான் மக்களை சென்றடைந்து கொண்டிருந்தது என்று 1985ல் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் கூறியதையும், அக்டோபர் 2009ல் ராகுல் காந்தி மற்றும் திட்ட ஆணையத்தின் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா அவர்கள் ரூபாய்க்கு 16 பைசா தான் மக்களை சென்றடைகிறது என்றும் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், முறைகேடுகளை / ஊழலை ஒழிக்க முடியவில்லை என்பதை ஏற்று கொண்டதும் நாடறிந்தது. (ஆதாரம் : அக்டோபர், 14, 2009 அன்று நடந்த கருத்தரங்கதில் ஆற்றிய உரை)
2014ல் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன், அதிதீவிரமாக செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் ‘அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம்’ (ஜன்தன் யோஜனா). அதன் மூலம் அனைவரின் வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டன.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், பொது விநியோக முறை திட்டம் (சில மாநிலங்களில்), எரிவாயு மானியம், உர மானியம், ஆகியவற்றோடு ஆதார் எண்கள் இணைக்கப்பட்டன. மூன்று கோடிக்கும் அதிகமான போலி பொது விநியோக திட்ட (ரேஷன்) அட்டைகள், நூறு நாள் திட்டத்தில் போலி பயனாளிகள், நான்கு கோடிக்கும் அதிகமான எரிவாயு மானியம் பெற்றுக்கொண்டிருந்த போலி இணைப்புகள், இரட்டை இணைப்புகள், உபயோகப்படுத்தாத இணைப்புகள் அகற்றப்பட்டன.
இதனால் போலி பயனாளிகள் வெளியேற்றப்பட்டு தேவையுள்ள பயனாளிகள் இணைக்கப்பட்டனர். மேலும், இந்த மானியங்களை, உதவிகளை பணமாக வழங்கி கொண்டிருந்த முறையை நிறுத்தி விட்டு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியதன் மூலம், 2014ம் ஆண்டிலிருந்து இது வரை சுமார்’ஒன்றரை லட்சம் கோடி’ ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
இப்படி அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கும்பல் தான் இன்று நரேந்திர மோடியின் அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றன. ஜன்தன், ஆதார், கைபேசி இணைப்பு திட்டம் (JAM) மூலம் மக்கள் நலத்திட்டங்களை முறைகேடாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்து கொண்டிருந்த போலி பயனாளிகள், இடைத்தரகர்கள் ,அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோர் தங்களின் குறுக்கு வழி வருமானத்தை மோடி நிறுத்தி விட்டார் என்ற கோபத்தில் தான் பாஜக அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை, சட்டங்களை எதிர்க்கின்றனர்.
அனைத்தையும் எண்ணியல் (Digital) மயமாக்குவதன் மூலம் இனி நிர்வாகத்தில், பணப்பட்டுவாடாவில் ஊழல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுக்கொண்டிருப்பது குறித்து பெரும் கவலை அடைந்துள்ளனர், இது நாள் வரை அனுபவித்து கொண்டிருந்தவர்கள். இந்த நிர்வாக சீர்திருத்த மாற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அது குறித்து பேச இயலாத காரணத்தால், பணமதிப்பிழப்பு, பொருள் மற்றும் சேவை வரி போன்றவற்றை விமர்சித்து வந்தன.
தற்போது புதிய இணைப்பாக இந்தியாவின் குடிமகன்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படுத்தாத குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மத ரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் எதிர் கொண்டு, தேச நலன், மக்கள் நலன் , வளர்ச்சி என்ற நோக்கத்தோடு செயல்படும் நரேந்திர மோடியின் பாஜக அரசு வெற்றி நடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது,
- நாராயணன் திருப்பதி, (செய்தி தொடர்பாளர், பாஜக.,)