மங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையின் உள்ளே வெடிகுண்டு இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனே அதனை செயல் இழக்க வைக்கும் பணிகளில் இறங்கினர்.
இன்று காலை மங்களூர் விமான நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கருப்பு நிறப் பையில் வெடிகுண்டு சாதனங்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், மைசூருக்கு அடுத்தபடியாக மங்களூர் அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட இரண்டாவது பெரிய நகரம். கடற்கரையோர நகரம் என்பதால், இங்கே வெளிநாட்டில் இருந்து பயணிகள் பெருமளவில் வருகின்றனர். குறிப்பாக, வட கேரளத்தை ஒட்டியுள்ள பெரு நகரம் என்பதால், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகவும் திகழ்கிறது.
எனவே பயங்கரவாதிகள் எளிதில் வந்து செல்லும் பகுதியாகவும், பயங்கரவாதத் தொடர்புள்ளவர்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் இருப்பது மங்களூர். அண்மையில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்று தப்பித்துச் சென்ற பயங்கரவாதிகள் இருவரும் உடுப்பி சென்று பின் மங்களூரு வழியாகவே நேபாளம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்று கருப்பு நிறப் பை ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்டறிந்த விமான நிலைய அதிகாரிகள், சந்தேகம் கொண்டு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அங்கு வேகமாக வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பை குறித்து சோதனை நடத்தினர்.
அந்த கருப்பு நிறப் பையில் பேட்டரி, வயர், டைமர் வாட்ச், வெடிகுண்டு தயாரிப்பதற்கான சாதனங்கள், வெடிகுண்டை இயக்கச் செய்யும் டெடோன்டோர் கருவி, வெடிமருந்து எல்லாம் இருந்துள்ளது. இதனால் உடனடியாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்த்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை இந்த சோதனையை செய்தது. ஆனால் இந்த குண்டு அப்போது செயல்படும் நிலையில் இல்லை. இதனால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதன் பின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை சோதனை செய்தது. அதில் ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், இந்த வெடிகுண்டு பையை வைத்துவிட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இண்டிகோ விமான புக்கிங் கவுண்டருக்கு அருகே இவர் அந்த பையை வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இவர் யார் என்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ஆட்டோ எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்றது.
அடுத்த சில நாட்களில் குடியரசு தின விழா வருவதால், அதனை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் சதிச் செயல்களில் ஈடுபடுவர் என்று ஏற்கெனவே மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விட்டிருப்பதால், இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.