கேரளாவில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. உலகம் முழுதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனோ வைரஸ்! காரணம், இதற்கு தடுப்பு மருந்துகளோ மருந்துகளோ இல்லை என்பதுதான்! இந்த வைரஸ் தொற்றால், சீனாவில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். 7ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் உலகம் முழுதும் பரவி வருகிறது. தாய்லாந்து, மியான்மர், பாகிஸ்தான் என அடுத்த நாடுகளுக்கும் கொரோனோ வைரஸ் பரவி வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் கேரளா திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாணவர் உடல் நிலை சீராக உள்ளது என்றும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை 806 பேர் சீனாவில் இருந்து கேரளா திரும்பியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று 173 பேர் கேரளா வந்த நிலையில் 10 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது.
கொரோனோ வைரஸ் பாதிக்கப் பட்டவர்களை தனிமைப் படுத்தி, வேறு எவருக்கும் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.