
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
தில்லி வன்முறை தொடர்பான விசாரணைக்கு மூத்த காவல்துறை அதிகாரி ஆஜராக தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரம் தொடர்பான மனு மீதான விசாரணையும், ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதும் உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது.

தில்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்திருந்தார். வன்முறை பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி வன்முறை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் அளிக்கிறார் அஜித்தோவல். வன்முறை குறித்து பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடனும் அஜித்தோவல் பேச்சு நடத்தினார்.
முன்னதாக, தில்லி வன்முறையில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ்காரர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில், ரத்தன் லால் (42) என்ற காவலர் உயிரிழந்தார். அவர் கல்வீச்சில் காயமடைந்து இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், ரத்தன் லாலில் இடது தோளில்குண்டு பாய்ந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவர் உயிரிழந்ததாக, அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. ரத்தன் லாலின் இறுதிச் சடங்கு, தில்லியில் நேற்று நடந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
தில்லியில் வெடித்த வன்முறை தொடர்பாக நேற்று நள்ளிரவு டில்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சையை உடனடியாக அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கம், ஆதரிப்பவர்களுக்கும் இடையே, திடீரென மோதல் வெடித்தது, வீடுகள், கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. சாலைகளில் டயர்களை எரித்ததால் போக்குவரத்து முடங்கியது.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் என்ற பெயரில் வன்முறையினை நிகழ்த்தியவர்கள் பெரும் அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

தில்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் வீட்டில் நள்ளிரவு 12.30க்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக போலீஸ், தன்வசமுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டும்.
காயமடைந்தவர்கள் விவரம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிகிச்சை அளிப்பது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவை குரு தேஜ் பகதூர் மற்றும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

தில்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதனிடையே தில்லி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 3வது ஆலோசனை இது.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தில்லி ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தில்லி சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா மற்றும் தில்லி போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


