
கௌஹாத்தி:
வடகிழக்கு மாநிலங்களான அசாமின் தின்சுகியா மாவட்டத்துக்கு உட்பட்ட சாதியா நகருக்கும், அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கும் இடையே, பிரம்மபுத்திராவின் கிளைநதியான லோஹித் நதியில் நாட்டின் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
9.15 கி.மீ. தொலைவு கொண்ட இந்தப் பாலம் இந்தியாவிலேயே மிகவும் நீளமானது. மும்பையில் பந்த்ரா– ஒர்லி இடையே கடல் மீது கட்டப்பட்டு உள்ள பாலத்தை விட 3.5 கி.மீ. நீளம் அதிகமானது. மேலும் ஆசியாவில் 2–வது நீளமான பாலம் என்ற சிறப்பையும் இந்தப் பெற்றுள்ளது.
இதுவரை இதன் ஒரு கரையில் உள்ள மக்கள் மறுகரைக்கு சென்று வர பெரும்பாலும் படகுகள் உள்ளிட்ட நீர்வழி போக்குவரத்தையே நம்பியிருந்தனர். இப்போது இந்தப் பாலத்தால், பயண நேரம் 7 மணிவரை குறையும், 165 கி.மீ., தொலைவு பயண வழித் தடம் குறையும்.
3 பாதைகளைக் கொண்ட இந்தப் பாலம் கனரக ராணுவ வாகனங்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 60 டன் பீரங்கிகள் உள்ளிட்ட படைக்கலன்களை எடுத்து செல்லும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் உள்ள இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலை–37–ல் ரூபாலி (அசாம்) நகரையும், தேசிய நெடுஞ்சாலை–52–ல் மேகா (அருணாச்சல பிரதேசம்) பகுதியையும் இணைக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. ரூ.2056 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் திறப்பு விழா, அதன் அசாம் முனையான சாதியா நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாலத்தை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாலத்தை திறந்து வைத்த பின்னர், பாதுகாப்பு வீரர்கள் யாரும் இல்லாமல் பாலத்தில் தனியாக நடந்து சென்றார் பிரதமர். சிறிது தொலைவு சென்ற அவர், பாலத்தின் கீழே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அழகையும், பாலத்தின் கம்பீரத்தையும் கண்டு ரசித்த பின்னர் வாகனம் மூலம் பாலத்தின் மற்றொரு முனையான அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கு சென்று விட்டு, மீண்டும் சாதியாவுக்கு திரும்பினார்.
தொடர்ந்து சாதியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவையொட்டி நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது,
தனது இசையாலும், பாடல்களாலும் தேச ஒற்றுமைக்கு அவர் அயராது பாடுபட்டார் சாதியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் புபென் ஹசரிகா. தற்போது திறக்கப்பட்ட இந்த பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்படுகிறது.
இந்த பாலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களின் நெருக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான தொலைவு 165 கி.மீ. வரை குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் 7 முதல் 8 மணி வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அசாம் மற்றும் அருணாசல பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதுடன், இந்தியா வல்லரசாகும் கனவையும் இந்த பாலம் நிறைவு செய்யும். அந்த வளர்ச்சி இந்த வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து தொடங்கவும் வழிவகுக்கும்.
வடகிழக்கு பகுதியில் உயர்தர இஞ்சி விவசாயிகளுக்கு புதிய வழி திறந்திருப்பதுடன், அவர்களது பொருளாதார நிலைமை மேம்படவும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தரமான வளர்ச்சிக்கு சிறந்த கட்டமைப்புகளே முதல் தேவை. அந்தவகையில் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் நிரந்தரமான கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.
– என்று நரேந்திர மோடி பேசினார்.



