
கோழிக்கோடு: சோசலிச தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யும், எழுத்தாளருமான எம் பி வீரேந்திரகுமார், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கோழிக்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
இதயப் பிரச்னைகளால் அவதிப்பட்ட 84 வயதான அவர் சிறிது காலமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். லோகதந்த்ரிக் ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்த அவர் மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.
கேரளாவில் தனது அரசியல் மற்றும் இலக்கிய பணிகளுக்காக புகழ்பெற்றவர் வீரந்திரகுமார். தமது வாழ்நாளில் பதவிகள் பலவற்றை அலங்கரித்திருந்தார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ) மற்றும் இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி (ஐ.என்.எஸ்) ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும், ‘மாத்ரூபூமி’ நாளிதழின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.
வயநாட்டின் கல்பேட்டாவில் வசதி மிக்க சமண குடும்பத்தில் பிறந்தவர் வீரேந்திரகுமார். 1968 இல் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
பின்னர், எல்.ஜே.டி.யை உருவாக்குவதற்கு முன்பு ஜனதா தளம், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) மற்றும் சோசலிச ஜனதா ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனதா கட்சிகளின் மையத் தலைவரானார். 1987 ஆம் ஆண்டில் கல்பேட்டாவிலிருந்து மாநில சட்டசபைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1991 வரை எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார், தொடர்ந்து வனத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோட்டில் இருந்து எம்.பி. ஆனார். வீரேந்திரகுமார் மத்திய நிதி அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் தொழிலாளர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களின் துறைகளைக் கையாண்டார்.
சிறந்த எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர். கேந்திர சாகித்ய அகாடமி மற்றும் வயலார் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வீரேந்திரகுமருக்கு மனைவி உஷா, மகன் எம் வி ஸ்ரேயம்ஸ் குமார், மகள்கள் எம் வி ஆஷா, எம் வி நிஷா மற்றும் எம் வி ஜெயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.