ஜம்மு காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு பாகிஸ்தான் ராணுவத்தினரும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்துவரும் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதோடு காஷ்மீரில் ஊடுருவும் தீவிரவாதிகளை ஒழிக்கவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் நவ்ஷெரா மற்றும் கிருஷ்ணா காடியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது திடீரென அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனால் இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.