
பாட்னா:
பீகார் மாநில முதலமைச்சராக பாஜக., உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆறாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். பின்னர், பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார்.
நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பீகார் மாநில பாஜக., தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க ஆதரவு அளிப்பதாகக் கூறி கடிதம் கொடுத்தார். இதையடுத்து, ஆளுநர் கேசரிநாத் திரிபாதி நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி இன்று காலை 10 மணிக்கு நிதிஷ் குமார் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். பீகாரின் முதல்வராக ஆறாவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக பாஜகவின் சுஷில் குமார் மோடி பதவியேற்றுக்கொண்டார்.



