புது தில்லி: பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக மாணவனைக் கைது செய்தது தொடர்பான வழக்கில், இன்னும் 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கானை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கான காரணம் என்ன என உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனாலி சின்ஹால் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் அனில் தவே, ஜே.சலமேஸ்வர், குரியன் ஜோசப் ஆகியார் அடங்கிய அமர்வு முன்னர் இது விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு இந்த அமர்வு உத்தரவிட்டது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை, கைது செய்யப்பட்ட மாணவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மாணவன் கைது செய்யபட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தார். இவர் மீது 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் அதிகார துஷ்பிரயோகம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்து தொடர்பான கைது நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை குறிப்பு அனுப்பியுள்ளது. அதை மீறி இந்த கைது நடந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டது. அப்போது உ.பி. அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, “மாணவன் பதிவு செய்த கருத்து தரக்குறைவானது, பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை நிரூபிக்க அரசிடம் ஆதாரம் உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட மாணவன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
பேஸ்புக்கில் கருத்து: மாணவன் கைதுக்கு விளக்கம் அளிக்க உ.பி. அரசுக்குக் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Popular Categories