பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கல்லூரி மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது மாணவி நிகிதா தோமர், காரில் வந்த தௌஃபீக் என்ற நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது… ஃபரிதாபாத்தில் உள்ள பாலப்கர் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வந்தவர் நிகிதா தோமர். இவர் வழக்கம் போல, கல்லூரியை முடித்து விட்டு, தனது தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த இருவரில் ஒருவன், கையில் துப்பாக்கியுடன் நிகிதாவை மறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அவனிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து, பின்னே நோக்கி ஓடிச் சென்ற அந்த நபர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால், மாணவியின் தலையில் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் அங்கிருந்து, வந்த காரிலேயே அதிவேகமாக தப்பியோடிச் சென்றனர்.
பட்டப்பகலில் மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலறிந்த போலீசார், நிகிதாவின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், நிகிதாவை சுட்டுக் கொன்ற நபரை கைது செய்த போலீஸார் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.
நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில், மதம் மாற மறுத்த நிகிதாவை தௌபீக் சுட்டுக் கொன்றதாக நிகிதா குடும்பத்தினர் தெரிவித்தனர். நிகிதா ராணுவத்தில் சேர விரும்பியதாகவும் அதற்குள் இவ்வாறு நடந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்துள்ள 3வது சம்பவம் இது என்கின்றனர் சமூகத் தளங்களில்.