வழக்கின் விபரங்கள் இனி, ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பகிரப்படாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தின்போது, வழக்குகள் அனைத்தும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்தன.
தனி குழு வழக்கின் விசாரணை உள்ளிட்ட விபரங்கள், ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம், வழக்கறிஞர்களுக்கும், தானாக நேரில் ஆஜராவோருக்கும் பகிரப்பட்டன. இதற்காக, ஒவ்வொரு வழக்குக்கும், வாட்ஸ் ஆப் செயலியில் தனி குழு அமைக்கப்பட்டது.
வாட்ஸ் ஆப் உள்ளிட்ட, சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடுகளை நிர்ணயித்து, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ‘ஒரு செய்தியை பகிரும்போது, அது எங்கிருந்து உருவானது என்ற தகவல்களை, மத்திய அரசு கேட்கும்போது அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்து உள்ளன.
இதையடுத்து, ‘இன்று முதல், வழக்கின் விசாரணை உள்ளிட்ட விபரங்கள், வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பப்படாது. பதிவு செய்யப்பட்டு உள்ள, இ – மெயில் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணுக்கு தகவல்கள் அனுப்பப்படும்’ என, உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.