இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் கூட, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எனவே தடுப்பூசியின் 2 டோஸையும் போட்டுக் கொண்டவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும், தொற்றுநோய்க்கு முந்தைய நடவடிக்கைகள் போன்றவற்றை மீண்டும் தொடங்கலாம் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) தெரிவித்தது.
ஆனால் கொரோனாவின் புதிய மாறுபாடுகளுக்கு இடையில் தடுப்பூசி செயல்திறனைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ” நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன், குறைந்தபட்சம் அதிகமான தரவு கிடைக்கும் வரை. இந்த வைரஸ் மிகவும் புத்திசாலி என்பதுடன் அது தொடர்ந்து உருமாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய வளர்ந்து வரும் வகைகளைப் பொருத்தவரை தடுப்பூசிகளிலிருந்து என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை நாங்கள் கூற முடியாது. எனவே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது. ஏனென்றால் வைரஸ் மாறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மாஸ்க், சமூக இடைவெளி நம்மை வைரஸில் இருந்து பாதுகாக்கும்.” என்று தெரிவித்தார்.