ஹோலி கொண்டாட அழைத்து முன்னாள் காதலனை புது காதலனுடன் குத்திக் கொன்ற சிறுமி

Published:

murderபுது தில்லி: ஹோலியை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் வா என்று தனது முன்னாள் காதலனை அழைத்தாள் ஒரு 15 வயதுச் சிறுமி. பின்னர் தனது புதிய காதலனுடன் சேர்ந்து அவனை குத்திக் கொன்றாள். அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவம் தலைநகர் தில்லிக்கு அருகேதான் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அடுத்த அதிர்ச்சி. வடக்கு தில்லியில் புராரி பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது…. ஜஹாங்கிர்புரி பகுதியில் தனது தாய் வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார் 15 வயதுச் சிறுமி. தாத்தா பாட்டி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். அதே ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் 16 வயது கமல் என்ற சிறுவனுடன் இந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கமல் அந்தப் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். அவனும் கூலி வேலைக்குச் சென்று வந்தானாம். கமலும் அந்தச் சிறுமியும் காதலித்து வந்தனராம். கமலுடன் ஒன்றாக ஊர் சுற்றி, சில ஆண்டு முன் வரை நட்பாக இருந்த அந்தச் சிறுமி, நட்பு கசந்து வேறு ஒரு 17 வயதுச் சிறுவனுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார். ஆனால், இதை கமல் விரும்பவில்லை. அந்தச் சிறுவனை இதற்காக அடித்து கண்டித்ததுடன், அந்தச் சிறுமியையும் கண்டித்துள்ளான். இதனால், கமல் இல்லாவிட்டால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றலாம் என்று சிறுமியும் அந்தப் புதிய நண்பனும் யோசிக்கவே, கமலை கொலை செய்யும் முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர். இதற்காக திட்டமிட்ட அவர்கள், தன் நண்பர்களின் துணையை நாடியுள்ளனர். இதை அடுத்து, ஹோலி விளையாடலாம் வா என்று புராரி பகுதிக்கு கமலை அழைத்துள்ளார் அந்தச் சிறுமி. அங்கு வண்ணப் பொடிகளைத் தூவி, ஹோலி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவன் கமல் சனிக்கிழமை அன்று அங்குச் சென்றுள்ளான். அப்போது, சிறுமியும், அவளின் புதிய காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4பேரும் சேர்ந்து, கமலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 20 வயதில் இருப்பவர்கள். அவர்களின் பெயர்கள் கௌதம், கெஸ்டோ, கோவிந்தா, நவீன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் தில்லி பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img