லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸார் மீதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதி கலவர பூமியானது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வழக்கறிஞர் ரோஷன் அகமது என்றும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பெரோஸ் நபி என்றும் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அதையடுத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற பகுதியிலும் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கட்டடங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அலகாபாத்-கான்பூர் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தி போக்குவரத்தை தடுத்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நேரில் வந்து சமாதானம் செய்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, நிலைமையை நேரில் கண்டறிவதாக வழக்குரைஞர்களிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்தனர். பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் தணிந்தது.
Popular Categories