தில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்தரி மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க அனுமதி கோரியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். இந்நிலையில், சட்டசபை கட்சி தலைவர் மற்றும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய தில்லி போலீஸ் கமாண்டோக்கள் 12 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

