
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக விசாரணையில் இறங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கருவி உடைக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல, “திட்டமிட்ட சதி செயல்”என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்
ஒடிசா மாநிலத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், சம்பவ இடத்தில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி முதற்கட்ட விசாரணையை கேட்டறிந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்” என்று குறிப்பிட்டார்.
இதனிடையே சம்பவ இடத்தை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த செயலின் பின்னணியில் எவராக இருந்தாலும் தப்ப மாட்டார்கள் என்று உறுதிபட சொன்னார். முதற்கட்ட விசாரணையிலேயே இதன் பின்னணியில் சதி வேலை இருப்பது தெரிய வந்ததால் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்தது. அத்துடன் உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு சிபிஐக்கு அது பரிந்துரை செய்தது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகளின் 10 பேர் கொண்ட குழு நேற்று ஒடிசா மாநிலம் பலாசோர் சென்றது.
அங்கு அந்தக் குழு பல பிரிவுகளாகப் பிரிந்து பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்தியது . நேற்று இரவு வரை நீடித்த இந்த விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை மாலை 6.52க்கு பகாநகர் பஜார் ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கந்தபாரா ரயில் நிலையத்தை 128 மைல் வேகத்தில் கடந்துள்ளது 6.54க்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பகாநகர் பஜார் ரயில் நிலையத்தைக் கடக்க பச்சை நிற சிக்னல் கிடைத்தது. ரயில் கட்டுப்பாட்டு அறை சிக்னல் பிரிவும் இதை உறுதி செய்தது. இதையடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் தொடர்ந்து அதே வேகத்தில் ரயிலை செலுத்தினார். ஆனால் அடுத்த ஒரு நிமிடத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது 6.55க்கு பிரதான லைனில் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பக்கவாட்டில் உள்ள லூப் லைனுக்கு மாறியது.
ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் (எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்) செய்யப்பட்ட மாற்றம் காரணமாகத்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வேறு தடத்துக்கு மாறி உள்ளது. இதுதான் விபத்துக்கான முக்கிய காரணம் என்று சிபிஐ அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
அவர்களது சந்தேகம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம் மாற்றி விட்டது யார்? என்பதுதான். ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாயின்ட் எந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை கட்டுப்பாட்டு அறைகளின் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு இன்டர்லாக்கிங் என்று அழைக்கப்படுகிறது. ஒரு ரயில் குறிப்பிட்ட பாதையில் செல்லும் போது அந்த வழித் தடத்தில் வேறு எந்த ரயிலும் இல்லை என்பது இன்டர்லாக்கிங் மூலம் முதலில் உறுதி செய்யப்படும்.
ரயில்வே கேட் பூட்டப்பட்டு இன்டர்லாக்கிங் கட்டமைப்புடன் இணைத்த பிறகு, கேட் கீப்பர் நினைத்தால் கூட ரயில்வே கேட்டை திறக்க முடியாது. ரயில் கடந்து சென்ற பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பூட்டு திறக்கப்பட்ட பிறகே கேட் கீப்பர், ரயில்வே கேட்டை திறக்க முடியும்.
இதே போல் இணைப்பு தண்டவாளங்களில் ஏதாவது ஒரு ரயில் நிறுத்தப்பட்டிருந்தால் அங்குள்ள பாயின்ட் எந்திரம் வாயிலாக இணைப்பு தண்டவாளம் ‘லாக்’ செய்யப்படும். இதன்படி வேறு எந்த ரயிலும் அந்த இணைப்பு தண்டவாளத்துக்கு செல்ல சிக்னல் கிடைக்காது. ஒடிசா வின் பகா நகர் பஜார் பகுதியின் இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள பாயின்ட் எந்திரம் ‘பாயின்ட்17’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாயின்ட் 17-ன் தவறான ‘லாக்’ காரணமாக இன்டர்லாக்கிங் தானியங்கி நடைமுறையில் இணைப்பு தண்டவாளத்தில் செல்ல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்கிறது. அந்த பாயின்ட் எந்திரத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்துதான் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்களது தீவிர விசாரணையின் போது இன்டர்லாக்கிங் கருவி உடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதன்மூலம் இன்டர்லாக்கிங் கருவியை யாரோ திட்டமிட்டு மாற்றி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கோரமண்டல் ரயில் சிக்னலுக்கான இன்டர்லாக்கிங் கருவியில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை டெல்லியில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இந்த சதிச்செயலைச் செய்தது ரயில்வே ஊழியரா? அல்லது வெளியில் இருந்து வந்த நபரா? என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்டர்லாக்கிங் கருவியில் நாசவேலை செய்தவர்கள் அதை மறைப்பதற்காக சில டிங்கரிங் வேலைகளைச் செய்திருப்பதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சிக்னலை மாற்றும் செயலை சிலர் திட்டமிட்டு நடத்தி இருப்பதும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
கோரமண்டல் எக்ஸ் பிரஸ் ரயில் கடந்து செல்லக்கூடிய பகாநகர் பஜார் ரயில் நிலையத்தில் உள்ள கேபின் அரங்கில் இந்த நாசவேலைகள் அரங்கேறி உள்ளன. இதை உறுதிப்படுத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இன்று இரண்டாவது நாளாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு முன்பு பகாநகர் பஜார் ரயில் நிலைய இன்டர்லாக்கிங் கேபின் பகுதிக்கு எவரெல்லாம் வந்து சென்றார்கள் என்று இப்போது விசாரித்து வருகிறார்கள்.
இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ரயில்களுக்கான பாதையை தேர்வு செய்து லாக் செய்துவிட்டால் அந்த ரயில் அந்தப் பாதையைக் கடந்த பிறகுதான் அந்தக் கருவியை திறக்க முடியும். இதை அனைத்து ரயில் பாதுகாப்பு நிபுணர்களும் சொல்கின்றார்கள். எனவே இன்டர்லாக்கிங் கருவியில் நாசவேலை செய்ததன் மூலம் மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தி இருப்பதை சி.பி.ஐ. முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளது மேலும் இன்டர்லாக்கிங் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் இந்த சதிச் செயலை செய்திருக்க முடியும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.