ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்து கோவிலான சுவாமி நாராயன் கோவிலை திறந்துவைத்தார் பிரதமர் மோடி. மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். கோயிலைத் திறந்து வைத்த பின்னர் சுவாமி நாராயணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது, அபுதாபியில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.. இந்தக் கோயில் ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலி வெள்ளை மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 900 கோடி அளவில், மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, நிலநடுக்கம், அதிக வெப்பத்தால் பாதிக்கப் படாத வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாப்ஸ் அமைப்பு சார்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, பாப்ஸ் அமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்துக் கோயிலான சுவாமி நாராயண் கோயிலைத் திறந்து வைத்து வழிபட்டார். கோயிலைத் திறந்து வைத்த பின்னர் சுவாமி நாராயணனுக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்திய-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனை அடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்துக் கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்.
இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு பிஏபிஎஸ் (BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா) கோயில் ஒரு நிலையான புகழாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே, பிஏபிஎஸ்ஸின் இந்துக் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக அபுதாபியில் உலக மத நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனைகள் எதிரொலித்ததாக கருத்துகள் பகிரப்பட்டன.
கடந்த பிப்.11ஆம் தேதியன்று அபுதாபியில் உள்ள ஹிந்துக் கோயிலில் விஸ்வ சம்வாதிதா யாகம் எனும் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான வேத பிரார்த்தனைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.
அபுதாபி ஸ்வாமி நாராயண் இந்துக் கோயிலின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக ஒற்றுமை ‘நல்லிணக்கத் திருவிழா’வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு அமைந்தது. பண்டைய இந்து வேதங்கள் ஒரு யாகத்தை இறைவனிடமிருந்து ஆசீ பெற உதவும் ஒரு சக்திவாய்ந்த வழியாக விவரிக்கின்றன.
இந்த யாகத்தில், அமீரகத்தின் மக்கள், பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்களது அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரின் நல்வாழ்வு, வெற்றிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது இந்தச் சடங்குகளை நடத்துவதற்காக வேத விற்பன்னர்கள் ஏழு பேர், பாரதத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்களுக்கு உதவிகரமாக 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவை நடத்தி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உறுதுணையாக இருந்தனர்.
பூஜ்ய மஹந்த் ஸ்வாமி மகாராஜின் வழிகாட்டுதலின் கீழ் இந்தக் கோயில் திட்டத்தைக் குறித்து, நிகழ்ச்சியை வழிநடத்தும் சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் விளக்கினார், “இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாகம் இந்தியாவுக்கு வெளியே அரிதாகவே நடைபெறுகிறது. பூஜ்ய மஹந்த் ஸ்வாமி மகாராஜ், உலகளாவிய ஒற்றுமை என்ற இந்தக் கோயிலின் அடிப்படையான அம்சத்துக்கு வெளிப்படையான வழியாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
யாகத்தின் மங்கலச் சுடர், நம் இருள் நீங்கி, ஆன்மீக ஞானம் நம்முள் பரவுவதைக் குறிக்கிறது. இயற்கையின் பஞ்ச பூதங்களும் ஒன்றிணைந்து, அதிசயமாக மழை பொழியும் வானத்தின் அரிய பின்னணியில், இது ஓர் அற்புதமான காட்சியாக இருந்தது. ஈரமான வானிலை இருந்தபோதிலும், பங்கேற்பாளர்களின் மகிழ்ச்சியான உற்சாகம் குறையவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லண்டனில் இருந்து வந்திருந்த 70 வயது பக்தர் ஜெயஸ்ரீ இனாம்தார் கூறுகையில், “மழை வரலாற்று நிகழ்வை மறக்க முடியாததாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றியது. என் வாழ்நாளில் மழையின்போது யாகம் நடப்பதை நான் பார்த்ததேயில்லை! இது குறிப்பாக மங்களகரமானதாக உணர்த்தியது என்று தெரிவித்தார்.
பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தா என்பது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த ஒரு சர்வதேச சமூக அடிப்படையிலான இந்து பெல்லோஷிப் ஆகும். இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள், 80,000 தன்னார்வலர்கள் மற்றும் 5,025 மையங்கள் மூலம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை கவனித்துக்கொள்கிறது. பூஜ்ய மஹந்த் சுவாமி மகாராஜின் தலைமையின் கீழ், ஆன்மீக ரீதியாக உயர்ந்த மற்றும் வன்முறை இல்லாத, அமைதியான, இணக்கமான சமூகத்தை உருவாக்க இது பாடுபடுகிறது.