
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI171 விமானம் (போயிங் 787 டிரீம் லைனர்) 2025 ஜூன் 12 இன்று பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்ட மூன்று நிமிடங்களில், அதாவது 1:38 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 12 ஊழியர்கள் உட்பட 242 பயணிகள் இருந்தனர், அதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகல் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனடியர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் பெரும் கரும்புகை வெளியேறியது, மேலும் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது..
விமானி, விமானம் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் வகையில் “மே டே” என்ற அவசர சமிக்ஞையை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியதாகவும், அதன் பின்னர் விமானம் தொடர்பை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டேக்-ஆஃப் சமயத்தில் நிகழ்ந்த முதல் விமான விபத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது, மேலும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விமான விபத்து புலனாய்வு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.
பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏர் இந்தியா 1800-5691-444 என்ற எண்ணையும், பிரிட்டன் அரசு 020-7008-5000 என்ற எண்ணையும் அறிவித்தன. மேலும், 011-2461-0843 மற்றும் 96503-91859 ஆகிய எண்களும் அவசர உதவிக்காக வழங்கப்பட்டன





